குடியரசு தின விழாவை ஒட்டி 26 பேருக்கு 2023ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களை மத்திய அரசு கௌரவித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று விஷ தன்மை வாய்ந்த பாம்புகளை பிடித்துவரும் தமிழ்நாட்டை சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இருளர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் செங்கல்பட்டு மாவட்டம் செந்நேரி என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



 

பத்மஸ்ரீ விருது பெற்றது தொடர்பாக, இருவரிடமும்  ஏபிபி நாடு சார்பில் தொடர்பு கொண்டு பேசினோம், அப்பொழுது அவர்கள் தெரிவித்த பதில்கள் பின் வருமாறு. ஏபிபி நாடு சார்பில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய மாசி சடையன் கூறுகையில்,

 

கேள்வி :- விருது வாங்குவது எப்படி பார்க்கிறீர்கள் ? நீங்க எதிர்ப்பார்த்திருக்கீங்களா ? 

 

மாசி:- இந்த விருது வாங்கியது எனக்கு எங்கள் சமுதாயத்திற்கும் பெருமை இந்த அரசுக்கும் பெருமை. நிச்சயமாக நாங்கள் இதை எதிர்பார்க்கவில்லை.

 

 

பாம்பு பிடித்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது எப்படி பார்க்கிறீர்கள் ?

 

 

பாம்பு பிடிப்பது ஒரு வீரமான தொழில் என்று எங்களுக்கு தெரியும் .ஆனால் அதில் இருக்கும் அதிகாரம் பற்றி எங்களுக்கு தெரியாது.

 



அரசு என்ன செய்ய வேண்டும் ? 

 

அரசு எது செய்தாலும், மகிழ்ச்சி தான் எங்களுக்கு , நாங்கள் படிக்காதவர்கள் தான் பாம்பு பிடித்து நல்ல பேர் வாங்க வேண்டும். எங்களுக்கு வீரம் கொடுத்தது இந்த பாம்பு பிடித்து தொழில் தான். பந்து விளையாட வெளிநாட்டிற்கு போவதை போல் நாங்கள் பாம்பு பிடிக்க சென்றோம் என கூறுகிறார் மாசி சடையன் . பல்வேறு நாடுகளுக்கு சென்று ராஜ நாகம் கண்ணாடிவிரியன் உள்ளிட்ட பல விஷமுள்ள பாம்புகளை பிடித்துள்ளோம் என தெரிவிக்கிறார் மாசி சடையன்.

 

 

விருது பெற்றது குறித்து வடிவேல் நம்மிடம் பகிர்ந்து கொள்கையில்,

 

 

பத்ம ஸ்ரீ விருது கொடுத்துருக்காங்க... எப்படி ஃபீல் பண்றீங்க...?  நீங்க எதிர்ப்பார்த்திருக்கீங்களா?

 

மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன் மூலம் எங்களுக்கு அங்கீகாரம் கிடைத்ததாக உணர்கிறோம். நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை ஆனால் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 

 

 உங்களோட பின்னணி பத்தி சொல்லுங்க... குடும்பத்துல எப்படி ஃபீல் பண்றாங்க...

 

 

குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் நாங்கள், தினமும் கூலி வேலைக்கு சென்றால் தான் உணவு. 



 

உங்க பாம்பு பிடி பயணம் பத்தி சொல்லுங்க... உங்க சமூகத்திற்கு இந்த விருது மூலமா எதாவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்குமா?

 

 

வெளிநாட்டுக்கு சென்று பாம்புகளைப் பிடித்துள்ளோம். வீரமாக சென்று பாம்பு பிடிப்பது தான் எங்களுடைய வழக்கம். அரசு எங்களுடைய சமுதாயத்திற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும்.

 

உங்க சமூகத்துக்கு நீங்க என்ன சொல்ல வர்றீங்க... பாம்புபிடி தொழில் பெரிதாக அங்கீகரிக்கப்படுவதில்லையே...?

 

 

என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை அரசு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என தழுதழுத்த குறளில் பேசுகிறார் வடிவேல். அங்கீகரிக்கவில்லை என்ற குறை இருக்கிறது, இவ்வளவு பாடுபட்டு பாம்பு பிடிக்கிறோம் ஆனால் நம்ம பிள்ளைகளுக்கு எதுவும் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் உள்ளது .

 

 

உங்கள் வருங்கால சந்ததிகள் இந்த தொழிலை பின்பற்ற வேண்டும் என நினைக்கிறீங்களா? அல்லது வேறு தொழிலுக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறீங்களா?

 

பாம்பு பிடிக்கும் தொழில்  தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். 

 



இந்த விருது மூலமாக மாற்றம் வரும் என்று நம்புகிறீர்களா?

 

என்ன சொல்வது, என்று தெரியவில்லை என கள்ளம் கபடம் இல்லாமல் சிரிக்கிறார் வடிவேல்.

 


வெளிநாட்டில் பாம்பு பிடித்த அனுபவம் எப்படி இருந்தது ?

 


 

அந்த அனுபவம் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை, நீங்க சூப்பரா பாம்பு பிடிக்கிறீர்கள் என வெளிநாட்டை சேர்ந்தவர்கள் எங்களை பாராட்டினார்கள். பக்காவா பாம்பு பிடித்தீர்கள் என வெளிநாட்டினர் பாராட்டியதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் வடிவேலு. இவர்கள் இருவருக்கும் தமிழக மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன