முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை திரும்பப்பெற அனுமதித்து  சிவகங்கை நீதிமன்றம் 2012ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத் துறை, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. 


2001-2006 ஆம் ஆண்டுகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக பதவிவகித்த ஒ.பன்னீர்செல்வம், டான்சி வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றபோது, முதல்வராகவும், பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பதவிவகித்தார்.


2006-ல் திமுக ஆட்சி அமைத்த நிலையில், மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ஓ.பி.எஸ் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவுசெய்தார். ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்கில், ஓ.பி.எஸ்., அவரது மனைவி விஜயலெட்சுமி, மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டனர்.


தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், 2009 ஜூலை 30-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘2001 சட்டமன்றத் தேர்தலின்போது ஓ.பி.எஸ். கணக்கில் காட்டிய சொத்து மதிப்பு, 17 லட்சத்து 44 ஆயிரத்து 840 ரூபாய் என்றும், வெற்றிக்கு பிறகு வருவாய்த்துறை அமைச்சர், முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர் என்று பதவிகள் வகித்த ஐந்து வருடங்களில், ஓ.பி.எஸ்ஸின் சொத்து மதிப்பு  ஒரு கோடியே 77 லட்சம் ரூபாயாக உயர்ந்ததாகவும்,  இது அவரது வருமானத்தைவிட 374 சதவிகிதம் அதிகமானது என்றும் குற்றம்சாட்டப்பட்டது.


இந்த வழக்கை வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஓ.பி.எஸ். தாக்கல் செய்த வழக்கில், மதுரை நீதிமன்றத்தில் இருந்து சிவகங்கை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றி 2012ஆம் ஆண்டு ஜனவரியில் உத்தரவிடப்பட்டது.


இந்த நிலையில் ஓ.பி.எஸ் மீது வழக்கு தொடர்வதற்காக கொடுத்திருந்த அனுமதியை திரும்பப் பெற்று, 2012 அக்டோபர் 27-ம் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சிவகங்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும்விதமான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்பதால், வழக்கைத் திரும்பப் பெறுவதாக தெரிவித்திருந்தது.


அந்த அறிக்கையை ஏற்ற நீதிமன்றம், ஒ.பி.எஸ். உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்துவைத்தது. இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோக்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கு இன்று முதல் வழக்காக விசாரிக்கப்பட்டது.


இன்றைய விசாரணையில், “லஞ்ச ஒழிப்பு துறை பச்சோந்தியாக மாறி விட்டது. ஆட்சிக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி கொள்கிறது. லஞ்ச ஒழுப்பு துறை கொண்டு வந்ததற்கான நோக்கமே சிதைந்து விட்டது. நீதிமன்றங்களும் இதற்கு துணை போகின்றன. வருமானத்துக்கு அதிகமாக 372% அதிகமாக சொத்து சேர்த்ததாக அறிக்கை தாக்கல் செய்த லஞ்ச ஒழிப்பு துறை பிறகு புகாரில் முகாந்திரம் இல்லை என தெரிவித்தது ஏற்றுக்கொள்ள முடியாது” என கடுமையாக பேசியுள்ளார்.


மேலும், ஓ.பி.எஸ் மீது வழக்கு தொடர அனுமதி தந்ததை திரும்ப பெற்று கொள்வதாக சபாநாயகர் தெரிவித்தது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றும், சபாநாயகர் தன்னை நீதிபதிபோல் கருதி முடிவெடுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.