சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள குப்பதாசன்வளவு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மனைவி ஆனந்தி. செந்தில் குமார் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் அவரது மனைவி ஆனந்தி கொங்கணாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அகிலா (20) மற்றும் புனிதா (19) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். அகிலா திருச்செங்கோடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். புனிதா 2022-2023 கல்வியாண்டில் எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றார். பின்னர் மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார்.


அண்மையில் நடந்து முடிந்த மருத்துவ கலந்தாய்வில் மாணவி புனிதாவிற்கு மதிப்பெண் குறைந்ததால் மருத்துவர் இடம் கிடைக்கவில்லை. இதனை அடுத்து மாணவி புனிதாவிற்கு நேற்று முன்தினம் நடைபெற்ற பாரா மெடிக்கல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்றார். இதிலும் மாணவி புனிதாவிற்கு அரசு ஒதுக்கிட்டிற்கான இடம் கிடைக்காத நிலையில் மனம் உடைந்த மாணவி புனிதா நேற்று யாரும் இல்லாத நிலையில் தனது வீட்டில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இது குறித்து தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எடப்பாடி காவல் துறையினர் மாணவி புனிதாவின் உடலை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவி புனிதாவின் இறப்பு குறித்து எடப்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மருத்துவ இடம் கிடைக்காத மாணவி மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)