தலைவாசல் அருகே ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு கரூர் கல் குவாரி உரிமையாளர் கடத்தி கொலை செய்யப்பட்டு காரில் தப்பி சென்ற அந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம், தேவியாக்குறிச்சி அரசு மறுவாழ்வு இல்லம் அருகில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை புறவழிச் சாலையில் நேற்று மாலை 5 மணிக்கு டிப்பர் லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற தலைவாசல் இன்ஸ்பெக்டர் வெங்கட் பிரபு மற்றும் போலீசார் அந்த டிப்பர் லாரியை சந்தேகமடைந்து சோதனை மேற்கொள்ள அருகில் சென்று பார்த்த போது திடீரென அந்த டிப்பர் லாரியின் அருகே நின்று கொண்டிருந்த இரண்டு பேர் போலீசாரை பார்த்த உடன் அங்கிருந்து தப்பி ஓடினார். அவர்களை ஓடுவதைப் பார்த்த தலைவாசல் இன்ஸ்பெக்டர் வெங்கட்பிரபு மற்றும் போலீசார் விரட்டிச் சென்றனர். அதில் ஒரு வாலிபர் போலீசாரிடம் சிக்கினார் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.




போலீசாரிடம் பிடிபட்ட வாலிபர் திருப்பூர் மாவட்டம், முத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் மகன் நவீன் (20) என தெரியவந்தது. இதனையடுத்து நவீனை லாரி நின்ற இடத்துக்கு போலீசார் அழைத்து வந்து லாரியில் சோதனையிட்டனர். அங்கு டிரைவர் சீட்டுக்கு அருகில் தலையில் வெட்டு காயத்துடன் அடித்துக் கொலை செய்யப்பட்டு முதியவர் ஒருவர் பிணமாக கிடந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர். திருப்பூர் மாவட்டம், புதுப்பாளையம் கிழக்கு பகுதியில் வசித்து வந்த சாமிநாதன் (65) என தெரியவந்தது. இவர் கரூர் மாவட்டம் தென்னிலை இப்பகுதியில் கல் குவாரி நடத்தி வருகிறார்.




இந்நிலையில் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு இவரை திருப்பூரில் இருந்து டிப்பர் லாரியில் கடத்திய மர்ம கும்பல் சேலம் பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் எதிர்பார்த்த தொகை வந்து சேரவில்லை என்ற விரக்தியில் கரூர் கல் குவாரி உரிமையாளர் சாமிநாதனை கடத்திய கும்பல் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் வேறு ஏதாவது காரணம் இருக்குமோ என்ற பல்வேறு கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணைக்கு பின் இந்த கொலையில் நவீன் உட்பட எத்தனை பேர் சம்பந்தப் பட்டிருப்பவர்கள் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.




இந்த வழக்கு சம்பந்தமாக தலைவாசல் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ,சாமிநாதனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு கல்குவாரி உரிமையாளரை கடத்தி வந்த கும்பல் ஒரு காரில் தப்பி ஓடிவிட்டதாகவும் தெரியவந்துள்ளது. அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கல் குவாரி உரிமையாளர் கடத்தி சென்ற டிப்பர் லாரியை போலீசார் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.




கரூர் கல் குவாரி உரிமையாளர் சாமிநாதனை ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு கிடைக்காத விரக்தியில் சாமிநாதனை கொலை செய்த சம்பவம் கரூர் மற்றும் சேலம் மாவட்ட கல் குவாரி உரிமையாளர்கள் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.