TN Fishermen Arrest: தமிழக மீனவர்கள் 9 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.


மேலும் 9 மீனவர்கள் கைது:


ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன் பிடித்தபோது எல்லையயை தாண்டியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் பயன்படுத்திய இரண்டு விசை படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த தொடர் நடவடிக்கையால், தமிழக மீனவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.


மீனவர்கள் போராட்டம்:


தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 74 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். 8 விசைப்படகுகள், 4 நாட்டுப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான மீனவர்கள் அனைவரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 மீனவர்கள், ஓராண்டு, 2 ஆண்டு மற்றும் 6 மாதம் சிறை தண்டனை பெற்று சிறையில் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில் 170க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை பறிமுதல் செய்து வைத்துள்ளது. இதை கண்டித்து அண்மையில் தமிழக மீனவர்கள் போராட்டத்திலும் கூட ஈடுபட்டனர். இந்நிலையில் தான் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மேலும் 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.


நிறைவேறுமா மீனவர்களின் கோரிக்கை?



  • சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்

  • இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை விடுவிக்க வேண்டும்

  • இலங்கை கடற்படையின் அத்துமீறலை தடுக்க மத்திய அரசு தடுக்க வேண்டும்

  •  சேதமடைந்த படகுகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்குவது போல, மத்திய அரசும் இழப்பீடு வழங்க வேண்டும்

  • கச்சத்தீவு பகுதியில் இருநாட்டு மீனவர்களும் பிரச்னை இல்லாமல், மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் பல காலமாகவே நிலுவையில் உள்ளது.