முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2  நாட்கள் சிபிசிஐடி போலீசார் கஸ்டடி விசாரணைக்கு அனுமதி வழங்கி கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 1 நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டார்.


 


 





100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் கடந்த 16 -ம் தேதி சிபிசிஐடி போலீசாரால் கேரளா மாநிலம் திருச்சூரில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில்  நீதிமன்ற காவலில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஜாமீன்  மற்றும்  போலீஸ்  காவல் கோரும் மனுக்களுக்கான விசாரணை கரூர் குற்றவியல் நடுவர் மன்றம் - 1 எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்காக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் கஸ்டடி விசாரணை  நடத்த சிபிசிஐடி சார்பில் 5 நாட்கள் நீதிபதியிடம் கேட்டுள்ளனர். 


 




 


சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 1 நீதிபதி பரத்குமார்  சிபிசிஐடி போலீசார் கஸ்டடி விசாரணைக்கு 2 நாட்கள் அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தும் போது அதிமுக வழக்கறிஞர் ஒருவர் உடன் இருக்க அனுமதி வழங்க வேண்டும்  என வைக்கப்பட்ட கோரிக்கைக்கு நீதிபதி பரத்குமார், போலீஸ் விசாரணையில் தலையீடோ, குறுக்கீடோ இருக்க கூடாது என்றும் விசாரணைக்கு பின் அவரை பார்த்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளார்.


 




 


கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம்  பத்திர பதிவு செய்து கொண்ட வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தற்போது, திருச்சி மத்திய சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். இதே போல, நிலத்தை பறி கொடுத்த பிரகாஷ் என்பவர் தன்னை அடித்து உதைத்து தனக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை பறித்துக் கொண்டதாக அளித்த புகாரின்பேரில் வாங்கல் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் 13 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


 




கரூர் நகர காவல் நிலையம் மற்றும் வாங்கல் காவல் நிலையம் என இரண்டு காவல் நிலைய வழக்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருந்து வருவது  குறிப்பிடத்தக்கது.