TN Fishermen Arrest: தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


12 தமிழக மீனவர்கள் கைது:


நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, ஒரு படகுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 12 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த செயல்களுக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 


தொடரும் மீனவர்கள் கைது:


இதனிடையே கடந்த 23ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் கைது செய்ததைத் தொடர்ந்து, தற்போது மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கக் கடலில் மீன் பிடிப்பதற்காக செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் இந்த நிலைதான் நீடிக்கிறது. 


முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்:


மீனவர்கள் கைது நடவடிக்கை தொடர்பாக அண்மையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். அதில், மீனவர்கள் கைது நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதுடன், அவை கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு இடையூறாகவும் உள்ளது.  இதுபோன்று நம் நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 128 மீனவர்களையும், 199 மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவிக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.


மீனவர்கள் கைது நடவடிக்கை தொடர்ந்து வரும் நிலையில், இரு நாடுகள் கொண்ட கூட்டுக் குழு அமைத்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே மீனவ மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.