செல்லூர் கண்மாயிலிருந்து கூடுதலாக தற்காலிக கால்வாய் அமைத்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீரை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மழை பாதிப்பு குறித்து ஆய்வு


 

மதுரை மாநகருக்குட்பட்ட பகுதிகளில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர், மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண் தம்புராஜ், முன்னிலையில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நேரில் ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். குறிப்பாக, கோரிப்பாளையம் அருகே வைகை ஆற்றங்கரை பகுதி, குலமங்கலம் சாலை பகுதி, செல்லூர் கண்மாய் மறுகால் பாயும் கால்வாய் பகுதி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

 


 

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி 


 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "மதுரை மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம். நமது பண்டைய நீர் மேலாண்மை முறையில் கண்மாய் முக்கிய பங்கு வகிக்கின்றன. அக்டோபர், நவம்பர் மாதங்களில் பொழிய வேண்டிய வடகிழக்கு பருவமழை மிக முன்னதாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலேயே தொடங்கி மதுரை மாநகரில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கண்மாய்கள் பரவலாக நிரம்பியுள்ளன. கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீர் இறுதியாக பந்தல்குடி கால்வாய் வழியாக செல்லூர் கண்மாயில் இருந்து வைகை ஆற்றிற்கு செல்கிறது. இதில் சில இடங்களில் கால்வாய்களின் கொள்ளளவை விட அதிகமாக நீர் செல்வதால் சில பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறை பணியாளர்கள் களத்தில் பணியில் ஈடுபட்டுள்ளனர். செல்லூர் கண்மாயிலிருந்து கூடுதலாக தற்காலிக கால்வாய் அமைத்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீரை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

 

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் ச. தினேஷ்குமார், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ தளபதி, ஆ. வெங்கடேசன் அவர்கள், மு. பூமிநாதன் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் தர. சக்திவேல் உட்பட பலர் உடன் இருந்தனர்.