ஏழு கோடி ரூபாய் நிலத்தை கல்விக்காக தானமாக வழங்கிய பூரணம் அம்மாளின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.


ஆயி பூரணம் அம்மாள்:


மதுரை மாவட்டம் கே புதூர் அருகே உள்ள சர்வேயர் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் உக்கிரபாண்டியன் - பூரணம் தம்பதியினர். இவர்களது மகள் ஜனனி உயிரிழந்த நிலையில், அவரது நினைவாக நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்று தாய் பூரணம் முடிவெடுத்துள்ளார்.


இதனிடையே, கொடிக்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை அரசு உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்காக தனது சொத்தை தானமாக வழங்கியுள்ளார். பள்ளிக்கு கட்டடத்தை கட்டிக்கொள்வதற்காக அவர் கொடுத்த 1 ஏக்கர் 52 செண்டு சொத்தின் மதிப்பு ரூபாய் 7 கோடியாகும். அந்த இடத்தில் உயர்நிலைப்பள்ளி கட்டடம் கட்டிக் கொள்வற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டியதென்றும், இந்த தானப் பத்திரம் இன்றைய தேதியிலேயே அரசுக்கு கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


கல்விக்காக நிலம் தானம்:


அதேபோல் கட்டடம் கட்டும்போது ஒரு வாசகம் பொறித்த கல்லை வைக்குமாறும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். அதன்படி, பள்ளிக்கு கட்டடம் கட்டுகையில், அதற்கு “ஜனனியின் நினைவு வளாகம்” என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.  சொத்தை மகளின் நினைவாக அரசுக்கு தான பத்திர பதிவு செய்து கொடுத்ததை, முறையாக முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா முன்னிலையில் பூரணம் மற்றும் அவர்களின் உறவினர்கள் ஒப்படைத்தனர்.


மகளின் நினைவாக 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை பள்ளி கட்டடம் கட்டிக்கொள்ளுமாறு தானம் கொடுத்த தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது இந்த நிலையில்  குடியரசு தினத்தன்று பூரணம் அம்மாவை நேரில் சந்தித்து கௌரவிக்க இருப்பதாக தமிழக முதலமைச்சர் அறிவித்திருந்தார்.


இதனிடையே அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க வந்த உதயநிதி ஸ்டாலின் வெகு நேரமாக  போட்டியை கண்டு ரசித்த பின்பு புறப்பட்டு நேரடியாக பூரணம்  அம்மா இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்தார்.


ஜனனி நினைவு வளாகம்:


இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “ ஏழு கோடி ரூபாய் நிலத்தை கல்விக்காக தானமாக வழங்கிய பூரணம் அம்மாளின்  கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதிமொழி கொடுத்துள்ளேன்.  பறிக்க முடியாத செல்வம் என்றால் அது கல்வி செல்வம் தான் என்ற அடிக்கடி முதல்வர் சொல்வார். அந்த கல்விக்காக  நிலத்தை தானமாக கொடுத்த பூரணமால் நம் எல்லோருக்கும் முன்உதாரணம்.


கிட்டத்தட்ட ஏழு கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தானமாக கொடுக்கப்பட்ட இடத்தில் உடனடியாக பள்ளி கட்டடத்தை கட்ட முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். பூர்ணம்மாளின் பணிக்கு தமிழக அரசு தலைவணங்குகிறது. பள்ளிக்கு கட்டடம் கட்டுகையில், அதற்கு “ஜனனியின் நினைவு வளாகம்” என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அவரது கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதிமொழி கொடுத்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.