கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள நடையனூர் பகுதியைச் சார்ந்தவர் விஜயலட்சுமி (28). பொறியியல் பட்டம் பெற்ற இவர், பெங்களூருவில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் பணிபுரிந்துள்ளார். இவருக்கு ஆங்கில மற்றும் கொரியன் மொழி தெரிந்துள்ளதால் ஆன்லைனில் தனது தொழில் சம்பந்தமாக  வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அப்போது தென் கொரியாவின் டோங்யோங் பகுதியை சார்ந்த மின்ஜுன் கிம் (28)உடன் வலைதளம் மூலம் பேச ஆரம்பித்துள்ளார். இவர் கிஸ்ட் பல்கலைக்கழகத்தில் வேதியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். இவர் தனது நாட்டில் உள்ள ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார்.


 




கடந்த ஓராண்டாக ஆன்லைன் மூலம் பேசி வந்த அவர்கள் நாளடைவில் காதலர்களா மாறினர். கடந்த மார்ச் மாதம் நேரில் காண்பதற்காக தென் கொரியா சென்ற பெண், மின்ஜுன் கிம் குடும்பத்தை நேரில் சந்தித்து பேசியதில் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர். அதேபோன்று பெண் வீட்டார் சார்பிலும் ஒப்புக்கொண்டனர். இந்த நிலையில் இரு விட்டார்கள் சம்மதத்துடன் திருமணம் தமிழ்நாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர்.


 


 




பெண் வீட்டார் திருமணம் பத்திரிக்கை அடித்து 19.05.2024 தேதி கல்யாணம் நிச்சயிக்கப்பட்டு அவர்களது உறவினர்களுக்கு வழங்கினர். தென் கொரியா நாட்டைச் சார்ந்த மின்ஜுன் கிம் குடும்பத்தினர் தாய், தந்தை அவரது நண்பர் உட்பட நான்கு நபர்கள் கடந்த வாரம் தமிழ்நாடு வந்தனர். வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள கோம்புபாளையம் பெருமாள் கோயிலில் இரு வீட்டார் முன்னிலையில் தமிழ் முறைப்படி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.


 


 




கிராம பகுதியில் முதல் முறையாக இது போன்ற திருமணம் நடைபெற்றதால் கொரியா நாட்டைச் சார்ந்த மணமகனை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். குறிப்பாக இரவு நிச்சயதார்த்தம்  நடைபெற்றபோது புதுமண தம்பதிகள் குழந்தைகளுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடி தங்களது சந்தோஷங்களை வெளிப்படுத்தினர். திருமணம் செய்து கொண்ட இருவரும் மணமகன் குடும்பத்தாருடன் தென் கொரியா நாட்டிற்கு செல்ல உள்ளனர். மேலும் அங்கு விஜயலட்சுமி தற்போது சுற்றுலா விசா மூலம் சென்ற பிறகு நிரந்தர விசா பெறுவதற்கு தேர்வு எழுத உள்ளதாக கூறினார்.