'' நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் தமிழகத்தின் முதலமைச்சராக திமுக தலைவர் முக.ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலினுக்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துவந்த நிலையில் நடிகர் சிவகுமார் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார். இதில் இவர், "திமுக தலைவர் கலைஞர் அவர்கள் தமிழக முதல்வராக ஐந்து  முறை பதவி வகித்திருக்கிறார். 19 ஆண்டுகள் அவர் தமிழ்நாட்டை ஆட்சி செய்திருக்கிறார். 1996-இல் திமுக 172 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்தது. அதற்குப் பின் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, கலைஞர் இறந்த பிறகு 125 இடங்களில் தனி பெறும் கட்சியாக தற்போது பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றிபெற்றது ஸ்டாலினின் இமாலய சாதனை. அதேபோல் உதயநிதி ஸ்டாலினும் முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்று, தாத்தாவிற்கேற்ற பேரன் என்பதை நிரூபித்துள்ளார்.


 



முதலமைச்சர் அவர்களுக்கு முதலிலேயே எனது வேண்டுகோள். ”கொரோனா காலத்திலிருந்து நம்ம மக்களை காப்பாத்துங்க. மருத்துவமனைகளிலும் மருந்துக் கடைகளிலும் காலையிலிருந்து மாலை வரைக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்பது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆஸ்பத்திரியில் படுக்கை இல்லை. படுக்கை இருந்தா, ஆக்ஸிஜன் இல்லை. ஆக்ஸிஜன் இருந்தா வெண்டிலேட்டர் இல்லை. இந்த கொடுமையிலிருந்து மக்களை காப்பாத்துங்க.


ஆந்திரா, கர்நாடகம், கேரளாவில் வசிப்பவர்கள் யாராக இருந்தாலும் அந்தந்த தாய் மொழிகளைப் படித்தே ஆகவேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தமிழ் குழந்தைகள் தமிழ் கற்காமலே பட்டப்படிப்பு படித்துவிட்டு, வேலைக்குச் செல்லும் அவலம் இருக்கிறது.


 



செம்மொழி மாநாடு நடத்தி தமிழுக்குப் பெருமை சேர்த்த முத்தமிழ் அறிஞரோட வாரிசு நீங்க. இங்க, தமிழ் மொழியில பட்ட படிப்பு படிச்சவங்களுக்கு இங்க நிச்சயம் வேலை உண்டு என்ற முறையை உண்டாக்கினால் தமிழ் நிச்சயமாக வாழும். ஏரி, குளங்களைப் பராமரித்து விவசாயம் செழிக்க உதவி செய்யுங்கள். கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய உழவர் சந்தைக்கு உயிர் கொடுங்கள். அரசியல் சாணக்கியர் கலைஞர் அவர்களின் மடியில் வளர்ந்த நீங்கள், தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சியில்தான் பொற்காலம் என்று சொல்வதுபோல் ஒரு நல்லாட்சியை வழங்குங்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்" என அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். 


இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்தும் தன்னுடைய வாழ்த்தை சிவகுமார் தெரிவித்திருக்கிறார். இது மட்டுமில்லாமல் கொரோனா நிவாரண நிதிகாக முதலமைச்சர் நிவாரணத்திற்கு ஒரு கோடி நிதியளிப்பும் செய்திருக்கிறார். மேலும், தமிழகத்தில் தமிழ் படித்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும். கடந்த நாற்பது வருடங்ளாக கலைஞரை சந்தித்திருக்கிறேன். அவர் அரசியல் வாரிசைச் சந்தித்ததிலும் மகிழ்ச்சி'' எனவும் சிவகுமார் கூறியுள்ளார்.