கொரோனாவின் கோரப்பசிக்கு நாளுக்கு நாள் நிறைய உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்புவின் ரசிகர் ஒருவரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். சிம்புவின் அகில இந்திய ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருந்தவர் ’குட்லக்’ சதீஷ். இவர் சிம்புவின் " காதல் அழிவதில்லை " படம் முதலே சிம்புவிற்கு அறிமுகம். தற்போது கொரோனாவால் உயிரிழந்துள்ள இவரது இழப்பைத் தாங்க முடியாத சிம்பு கடிதம் வாயிலாக தனது இரங்கலை தெரிவித்துள்ளார். டிவிட்டர் பக்கத்தில் சிம்பு வெளியிட்டிருந்த கடிதத்தில்...
அவசரப்பட்டுவிட்டாய், போய் வா சகோதரா, அழுகையுடன் வழி அனுப்பி வைக்கிறேன். ரசிகர்களே, நண்பர்களே, சகோதர சகோதரிகளே, நோய்வாய்ப்பட்டால் தயவுசெய்து நிலை குலையாதீர்கள். பயம் நம்மை வீழ்த்துகிறது. பயம் தான் நாம் நோயிலிருந்து குணமாக தடுக்கிறது. சாதாரண நோயைத் தீவிரமாக்குவதும் பயம்தான் நிலைகுலைதல் இதயத்தை தாக்குகிறது. தயவுசெய்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையில் மருத்துவம் செய்து கொள்வோம் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள், அதேசமயம் மன திடத்தையும் பெருக்கிக் கொள்வோம். தேவையான மருந்துகள் எடுத்து கொள்வதோடு அல்லாமல் தேவையற்று வெளியே செல்வதை தவிர்க்கவும் இழப்புகள் தாங்க முடியாததாக இருக்கிறது, பாதுகாப்பாக இருப்பதே கொரோனாவை விரட்டும் மருந்து என புரிந்து கொள்வோம். சகோதரன் குட்லக் சதீஷை இழந்தது போல் இன்னொருமுறை இழக்க விரும்பவில்லை வருத்தங்களுடன் முடிக்கிறேன் " என சிம்பு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்