தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகள் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 


அரசு விரைவுப்பேருந்துகள்:


இதுகுறித்து விரைவு போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் மிதவை, இருக்கை, படுக்கை, குளிர்சாதன வசதி, கழிவறை உள்ளிட்ட பல்வேறு சொகுசு வசதிகளைக் கொண்ட 1,078 பேருந்துகள் உள்ளன. இப்பேருந்துகள் 300 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட,  நெடுந்தூர பயணத்துக்காக 251 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 


50 சதவீத சலுகை:


தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையில், "அரசு விரைவுபோக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்வோருக்கு சிறப்பு சலுகையாக அடுத்த தொடர் பயணங்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்" என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். இந்த திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.


ஒரு மாதத்தில் 5 முறை தொடர்ச்சியாக முன்பதிவு செய்த பிறகு, 6-வது முறை முதல் தானாகவே 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கும் வகையில் www.tnstc.in  என்ற இணையதளத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை இத்திட்டத்தின் கீழ் 3 பேர் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சுமைப்பெட்டிகள்:


இளைஞர்கள் சுயதொழில் மூலம் வருமானம் ஈட்டும் வகையில், விரைவு பேருந்துகளில் உள்ள சுமைப் பெட்டிகள் மாதம் ரூ.6 ஆயிரம் வாடகைக்கு வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை நெல்லை, சேலத்தை சேர்ந்த இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த இளைஞர்களுக்கு சுமைப்பெட்டியை பயன்படுத்திக் கொள்ள உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இது இல்லாமல், மேலும் இருவரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விவசாயிகள், வியாபாரிகள் போன்றோரின் பொருட்களை ஏற்றி, இறக்க நியாயமான கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம். ஒரு பேருந்தில் உள்ள பெட்டியில் 100 கிலோ வரை ஏற்றிச் செல்ல முடியும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரைவு போக்குவரத்துக் கழக அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் படிக்க 


AIADMK Ex-Ministers : சொத்து குவிப்பு வழக்கு - முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்


OPS on Jallikattu: ஜல்லிக்கட்டு விவகாரம்; துரோகக் கூட்டம் சொந்தம் கொண்டாடுவதா?- திமுக அரசிடம் ஓபிஎஸ் கேள்வி