அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தபோது லஞ்சம் பெற்றதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,  சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14ஆம் தேதி, அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.


அதேநேரம், உடல்நலக்குறைபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.


வழக்கு மாற்றம் & ஜாமீன் மனு:


தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த மாதம் 14ம் தேதி மாற்றப்பட்டது. அங்கு அமைச்சர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், அதனை யார் விசாரிப்பது என்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே மாறுபட்ட கருத்து நிலவியது.





உயர்நீதிமன்றம் உத்தரவு:


இதன் காரணமாக தனது ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் ”அமைச்சரின் வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ வழக்குகளுக்கான நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு எனவும், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எம்.பி., எம்.எல்.ஏக்களாக இருந்தாலும், அந்த வழக்குகளை விசாரிக்க முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகார வரம்பு வழங்கப்பட்டுள்ளதாக” உத்தரவிட்டது. 





உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் என்.ஆர்.இளங்கோ வாதம் முன்வைத்தனர். சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதற்கான எந்த ஆதாரமோ சாட்சிகளோ இல்லை என்றும் பாஜகவின் அழுத்தம் காரணமாகவே உள்நோக்கத்துடன் கைது நடந்ததாக செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது.


அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் புரிந்ததற்கான மின்னனு ஆதாரங்கள் உள்ளதாக அமலாக்கத்துறை வாதிட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார். வரும் 20ஆம் தேதி, தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.


இதையும் படிக்க: Mark Antony Review: விஷாலை ஓரம் கட்டிய எஸ்.ஜே.சூர்யா.. கொண்டாட வைத்ததா “மார்க் ஆண்டனி” படம்?.. முழு விமர்சனம் இதோ..!