அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை என்றும் ஆளுநரின் நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

செந்தில் பாலாஜி கைது:

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையில், அதிமுக ஆட்சி காலத்தில் மாநில போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று கொண்டு ஏமாற்றிய வழக்கில் அமலாக்கத்துறை அவரை ஜூன் 14ஆம் தேதி கைது செய்தது.

Continues below advertisement

கைதை தொடர்ந்து நெஞ்சு வலி ஏற்பட்டதாக செந்தில் பாலாஜி கூறிய நிலையில், அவர் ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், செந்தில் பாலாஜியை கைது செய்ததது சட்ட விரோதம் எனக் கூறி, அவரின் மனைவி  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். 

அதேநேரம் செந்தில் பாலாஜி சார்பில் ஜாமின் கோரியும், அவரை விசாரணைக் காவலில் எடுக்க அனுமதி கோரி அமலாக்கத்துறையும் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியை, உயர்சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கியது. இதனை அடுத்து, ஜூலை 12ஆம்  தேதி வரை செந்தில் பாலாஜியை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது.

ஆளுநர் எதிர்ப்பு: 

இதற்கிடையே, செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த 16ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. 

இந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சராக நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டிருந்தார். செந்தில் பாலாஜியை அமைச்சரையில் ஆளுநர் நீக்கியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

  • முதலமைச்சர் கண்டனம்

அந்தவகையில், சென்னை வேளச்சேரியில் உள்ள குருநாதா கல்லூரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது, ”அமைச்சர் செந்தில் பாலாஜிய நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. எனவே அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கியதை சட்டரீதியாக எதிர்கொள்வோம்”  என்று தெரிவித்துள்ளார்.

  • டி.கே.எஸ்.இளங்கோவன்

”ஆளுநர் தொடர்ந்து அரசியல் சட்டத்துக்கு எதிராக செயல்படுகிறார். ஒரு அமைச்சரை நீக்கவோ, சேர்க்கவோ,  முதலமைச்சரால் தான் முடியும். தற்போது ஒரு அமைச்சரை நீக்கியுள்ள ஆளுநரால் ஒருவரை அமைச்சராக சேர்க்கமுடியுமா?" என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். 

  • திருமாவளவன்

”ஆர்.எஸ்.எஸ்ஸின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநர் செயல், சரியான மனநலம் உள்ளவர் செய்யும் செயலாக இல்லை” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.