Senthil Balaji Case: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செப்டம்பர் 15ஆம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நீதிமன்ற காவல் நீட்டிப்பு:


சட்ட விரோத பணப் பரிமாற்றம் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் முடிவடைந்து இன்று எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி முன்பு செந்தில் பாலாஜி நேரில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.


முன்னதாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த கடந்த 7 ஆம் தேதி நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி 12ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஐந்து நாட்கள் விசாரணை நடத்தினர். பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, அவரின் நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி இன்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்து  சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.


ஜாமீன் பெற நீதிமன்றத்தை நாடலாம்:


அப்போது, அமலாக்கதுறை  தாக்கல் செய்த சுமார் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜியிடம் அளித்தது. அதன்பின், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி உத்தரவிட்டுள்ளார். மேலும், அடுத்த காவல் நீட்டிப்புக்கு நேரில் ஆஜராக தேவையில்லை என்றும் காணொலி காட்சி மூலமாக ஆஜாரனால் போதும் என்றும் நீதிபதி ரவி தெரிவித்திருக்கிறார். ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடலாம் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


வழக்கின் பின்னணி:


அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். 


செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து, இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தீர்ப்பளிக்கையில், “இரண்டு நீதிபதிகள் அமர்வில் பரத சக்கரவர்த்தி கூறிய கருத்துடன் உடன்படுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோர் மேல்முறையீடு செய்திருந்தனர். ஆனால் அவரது கைது சரியானது என உச்சநீதிமன்ற தீர்ப்பளித்த பிறகு, அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.