தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும், ஊரடங்கு காரணமாகவும் பள்ளிகள் முறையாக இயங்கவில்லை. இந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் ,முகக் கவசங்கள் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் வகுப்பு அறைகள் அமைத்திருக்க வேண்டும்,  ஒவ்வொரு வகுப்பறைகளிலும் கைகளை சுத்தம் செய்யும் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும், குறிப்பாக ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டு இருக்க வேண்டும் அதே போன்று 18 வயதிற்கு மேல் உள்ள மாணவர்களும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள  வேண்டும் என அரசு தெரிவித்திருந்தது. இந்த வழிகாட்டுதலின்படி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி திறக்கப்பட்டது.இதன்படி  மாணவர்களை சமூக இடைவெளியை அமர வைத்து ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பள்ளிகள் திறக்கப்படாத 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது தொடர்பாக வரும் 8-ஆம் தேதிக்கு பிறகு ஆலோசிக்கப்படும் என்று திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.




செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 9, முதல் 12 வகுப்பு வரைக்கும் பள்ளிகள் திறக்கபட்டு நடைபெற்று வருகிறது. முதல் 8 நாட்களுக்கு  பள்ளிகளில்  ஆசிரியர்கள், மாணவர்கள் ,வருகை எப்படி உள்ளது என்பது குறித்து அந்த வருகைப்பதிவேட்டை  முழுமையாக சரிபார்க்கபடும், பின்பு பள்ளிகள் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை செய்து அறிவிப்பார். தொடக்கபள்ளி என்பது மிகவும் முக்கியமானது , மாணவர்களின் நலனை கருதி வரும் 8-ஆம் தேதிக்கு பிறகு முதல்வர் வழிகாட்டுதலை தெரிவிப்பார். கொரோனா தொற்று மாணவர்களுக்கு உறுதியானதை அடுத்து அவர்களை முழுமையாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தொற்று பரவாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.




கடந்த 2 நாட்களாக பள்ளி  மாணவ ,மாணவிகளுக்கு கொரோனா  தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று ஆசிரியர்களுக்கும் ஒரு சிலருக்கு அறிகுறிகள் உறுதி  செய்யப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் மத்தியில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்களின் தொடர்பில் இருந்த  அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேலும் அந்த வகுப்பறை முழுவதும் கிருமி நாசினி தெளித்து தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்றார். மேலும்  அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ,மாணவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை பள்ளி வளாகம் உருவாக்கித் தர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.குறிப்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அரசு கூறிய விதிகளை பின்பற்றி பள்ளிகள் செயல்பட்டு வருகிறதா, மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளதா ,என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று  பரவாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், மாவட்ட நிர்வாகம்  எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.