சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயம் அடைந்துள்ள நிலையில், கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 


சென்னை, அரும்பாக்கத்தில் எம்.எம்.டி.ஏ. காலனி பகுதியில் பள்ளி முடிந்து, சிறுமி தாயுடன் வீடு திரும்பி கொண்டிருந்தார்.  அப்போது சாலையில் வந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று சிறுமியை முட்டி, தூக்கி வீசியது. இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த நிலையில், சென்னையில் சிறுமியை முட்டிய மாட்டின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 


இதற்கிடையே கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


’’சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ. பகுதியில் சாலையில் கட்டுப்பாடின்றி திரிந்த பசு மாடு, அவ்வழியே சென்ற பள்ளிக் குழந்தையை  முட்டித் தூக்கி வீசியதில் அந்தக் குழந்தை படுகாயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறாள்.  பள்ளி சென்று திரும்பிய  குழந்தை  வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக மருத்துவமனைக்கு சென்றிருப்பது வேதனையளிக்கிறது. காயமடைந்த குழந்தை  விரைவில் முழு நலம் பெற்று வீடு திரும்ப எனது விருப்பங்களைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.


பள்ளிக்குழந்தை  முட்டித் தூக்கி வீசப்பட்டது மட்டுமின்றி, சாலை விபத்துகளுக்கும் கால்நடைகள் காரணமாக உள்ளன. சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும், அதிக போக்குவரத்து நிகழும் கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையிலும்  கால்நடைகள்  திடீரென சாலைகளுக்குள் நுழைவதால் அதிக விபத்துகள் நடக்கின்றன; அதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இவை தடுக்கப்பட வேண்டும்.


சென்னை மாநகர எல்லைக்குள் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கால்நடைகளைக் கட்டுப்படுத்த  எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாதது தான் இதற்கு காரணம். சென்னை மாநகரில் கால்நடை வளர்ப்பை சட்டத்தின் வழியாக மட்டுமே பார்க்க முடியாது.  கால்நடைகள் சென்னையின் பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரம் சார்ந்தவை என்பதால், அந்தக் கோணத்திலும் தான்  பார்க்க வேண்டியுள்ளது.  அதேநேரத்தில் கால்நடைகளால் மக்களுக்கு எந்த பாதிப்பும்  ஏற்படுவதை அனுமதிக்க முடியாது.


பொதுமக்களின் குறிப்பாக குழந்தைகளின்  பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தை  கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியும்,  காவல்துறையும்  நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு  தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை  தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’.


இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.