சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன் மலைப்பகுதிக்கு அருகே பாப்பநாய்க்கன்பட்டி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில், காவலர்கள் தாக்கியதால் இடையப்பட்டியை சேர்ந்த முருகேசன் (45) உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  தனது ட்விட்டர் பதிவில், "சாமான்ய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும். மே 7-க்கு முன்பாக இருந்த மனோ நிலையில் இருந்து மாற வேண்டும். நடப்பது  திமுகவின் மக்களுக்கான ஆட்சி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.  


இதற்கிடையே, முருகேசன் உயிரிழந்த வழக்கில், ஏத்தாப்பூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை, மனித உரிமை மீறல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஏபிபி செய்தி நிறுவனத்திடம் பேசிய சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், “எஸ்.எஸ்.ஐ. பெரியசாமி கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது பணியில் இருந்த மற்ற காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.


 



சோதனைச் சாவடியில் காவல் துறையினர் தாக்கும் வீடியோ காட்சிகளும், முருகேசனை தாக்க வேண்டாம் என உடனிருந்தவர்கள் கெஞ்சும் காட்சிகளும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவலர்கள் தாக்கியதால்தான் முருகேசன் உயிரிழந்ததாக குற்றம்சாட்டியுள்ள முருகேசனின் உறவினர்கள், தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். 


பதறவைத்த வீடியோ, கெஞ்சும் காட்சிகள் ; வியாபாரி உயிரிழந்த விவகாரத்தில் எஸ்.எஸ்.ஐ கைது..!


சோதனைச் சாவடியில் தாக்குதல்: 


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்வராயன் மலைப் பகுதிக்கு அருகே பாப்பநாய்க்கன்பட்டி பகுதி உள்ளது. அப்பகுதி வழியாக தர்மபுரி, கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு சென்று வர முடியும். இதனால் அப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் ஏத்தாபூர் காவல் துறையினர், நேற்று மாலை மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து வந்த  இரு சக்கர வாகனத்தில் 3 பேரை காவல் துறையினர் நிறுத்தி விசாரித்துள்ளனர்.


அவர்கள் மது போதையில் வந்ததாகவும், மதுபாட்டில்களை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. மேலும் அவர்கள் மீது காவல் துறையினர் லத்தியால் தாக்கியுள்ளனர். காவல் துறையினர் சரமாரியாக தாக்கியபோது, முருகேசனை அடிக்க வேண்டாம் என அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி உள்ளிட்டோர் தொடர்ந்து காவல் துறையினர் தாக்கியுள்ளனர். அப்போது தரையில் கீழேவிழுந்த இடையப்பட்டியை சேர்ந்த முருகேசன் (45) என்பவருக்கு பின் மண்டையில் காயம் ஏற்பட்டது.



முருகேசன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று முதலுதவி அளித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக முருகேசன் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முருகேசன் இன்று காலை உயிரிழந்தார். உயிரிழந்த முருகேசன் இடையம்பட்டியில் மளிகைக் கடை நடத்தி வந்துள்ளார். அவருக்கு அன்னக்கிளி என்ற மனைவியும், ஜெயப்பிரியா, ஜெயபிருந்தா, ஜெயப்பிரியன் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளன.