சேலம் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான புறநயாளிகளாக வந்து செல்கின்றனர். அத்துடன் சுமார் 2000 பேர் உள்நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டியாக தரம் உயர்த்தப்பட்டதால் இருதயம், சிறுநீரகம், மகப்பேறு மற்றும் பெண்கள் நலன், எலும்பு முறிவு, பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, கண், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலன் என பல்வேறு துறைகளில் அதிநவீன அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சேலம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். 



மருத்துவமனையில் ஆரம்பகட்ட பரிசோதனையில் இருந்து அறுவை சிகிச்சை வரை அனைத்து நடைமுறையும் எளிதாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால் நோயாளிகள் அதிகளவிலான சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஆறு மாத செயல்பாடுகள் அடிப்படையில் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை இரண்டாவது இடம் பிடித்துள்ளது கடந்த ஆறு மாதகாலங்களில் நாளொன்றுக்கு சராசரியாக 3,142 பேர் புற நோயாளிகளாக வந்து சென்றுள்ளனர். மற்றும் 1,680 பேர் தங்கி சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். மகப்பேறு துறையை பொருத்தவரை பிரசவத்திற்காக 9,675 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 7,795 தாய்மார்கள் சிக்கலான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5,574 குழந்தைகள் பிறந்துள்ளனர். இதில் 3005 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளனர். இதில் 467 அறுவை சிகிச்சைகள் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே சிறுநீரகத் துறையின் கீழ் 6,557 பேர் டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. கண் சிகிச்சை 3,058 பேருக்கு பல்வேறு சிகிச்சை பிரிவின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளில் கடந்த 6 மாத காலங்களில் 12,323 முக்கிய அறுவை சிகிச்சைகளும் நடைபெற்றுள்ளது. மேலும் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை 17,989 என 30,312 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



மேலும் அல்ட்ரா ஸ்கேன், இசிஜி, ரத்த பரிசோதனை, சிறுநீரகப் பரிசோதனை மற்றும் விஷ மருந்து அருந்துதல், பாம்பு மற்றும் விஷக்கடி போன்ற அவசர சிகிச்சைக்காக சிறப்பாக செயல்பட்டு உள்ளதாலும் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாநில அளவிலான சிறப்பாக செயல்படும் அரசு மருத்துவமனையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு இரண்டாவது இடம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதலிடமும், கோவை அரசு மருத்துவமனை மூன்றாவது இடமும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் முதல்வர் மணி கூறுகையில், தற்போது இரண்டாவது இடத்தில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை உள்ள நிலையில் விரைவில் சிறந்த சேவைகள் மூலமாக முதலிடத்தை அடைவோம் என்ற எண்ணத்துடன் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், இதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தான் காரணம் என்றும் முதல்வர் தெரிவித்தார்.