இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பு செய்துவரும் படைப்பாளிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் சாகித்திய அகாடமி  விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. 2020 ம் ஆண்டுக்கான விருதுகள் தமிழ் உள்பட இருபது மொழிகளைச் சேர்ந்த படைப்பாளர்களுக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழ் நாவல் ஆசிரியரும் பிரபல எழுத்தாளருமான இமையத்துக்கு 2020-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது. இவர் எழுதி பெரும் பாராட்டுக்களை பெற்ற செல்லாத பணம் என்ற நாவலுக்காக இந்த விருதை பெற்று இருக்கிறார் இமையம்.


தலைநகர் டெல்லியில் உள்ள கமானி கலையரங்கத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், எழுத்தாளர் இமயத்துக்கு சாகித்ய அகாடமி விருதுடன் பரிசுத்தொகையாக ஒரு லட்சம்   ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்பட்டன. இதனை திமுக கரை வேட்டி அணிந்தபடியே மேடையேறி வாங்கினார் இமயம் அவருடன் சேர்த்து மேலும் பல்வேறு மொழிகள் தாக்கங்களை ஏற்படுத்திய எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகும் படைப்பு இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்படும்.



எழுத்து உலகில் கவுரவம் மிக்க விருதாக கருதப்படும் சாகித்ய அகாடமி விருது வென்றதன் மூலம் இமயத்தின் செல்லாத பணம் நாவலும், நாட்டின் 24 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்து மக்களிடமும் சென்றடைய இருக்கிறது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர் இமையத்தின் இயற்பெயர் அண்ணாமலை. விருத்தாசலத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர் பன்முக திறமை படைத்தவர். சாதி ஆதிக்க மனோபாவத்தை வெளிப்படையாக விமர்சித்து வரும் இமையம் திராவிட கொள்கைகளில் பற்று மிக்கவர். திமுக ஆதரவாளர்.


1994 ஆம் ஆண்டு இவர் எழுதிய கோவேறு கழுதைகள் என்ற நாவல் மூலம் வாசகர்களை தனது வசிய எழுத்துக்களால் கட்டிப்போட்டார். அன்று தொடங்கிய இமயத்தின் எழுத்துப்பயணம் 25 ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது.இவருக்கு கனடாவில் இயங்கி வரும் தமிழ் இலக்கிய தோட்ட அறக்கட்டளை 2018 ஆம் ஆண்டுக்கு இயல் விருதை வழங்கி கவுரவித்தது. இவரது முதல் நாவலான கோவோறு கழுதைகள் ஆங்கிலத்தில் BEAST OF THE BURDERS என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டு விற்பனையில் சக்கைபோடு போட்டது.


நாவல்கள், சிறுகதைகள், நெடுங்கதை, அரசியல் சமூக விழிப்புணர்வு பேச்சுக்கள் என பல தடங்களிலும் தொடர்ந்து பயணித்து வருகிறார். கோவேறு கழுதைகள், செல்லாத பணம், ஆறுமுகம், செடல், எங் கெத உள்ளிட்ட 6 நாவல்களையும் 6 சிறுகதைத் தொகுப்புகளையும், ஒரு நெடுங்கதையையும் இமையம் எழுதி உள்ளார். 'இப்போது நான் உயிரோடு இருக்கிறேன்' என்ற நாவலை எழுதி வரும் இமையம் அதை ஜனவரி மாதம் வெளியிட இருக்கிறார். இளநிலை ஆய்வு நல்கை, புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது, ஆனந்த விகடன் விருது, பெரியார் விருது, தமிழக அரசு வழங்கும் தமிழ்த்தென்றல் திருவிக விருதுகளையும் பெற்றுள்ளார் இமையம்.


மிக மிக எளிமையான மொழி நடையில் அடித்தட்டு மக்களின் வாழ்வை, அவர்களின் துன்பங்களை பேசும் நாவல்களை எழுதி வருபவர் இமையம். தற்போது விருது பெற்றுள்ள செல்லாத பணம் நாவல் குட்டி குட்டி ஆசைகளுடன் திருமண, குடும்ப வாழ்வுக்குள் அடியெடுத்து வைக்கும் பெண்கள் கணவனால் எதிர்கொள்ளும் துயரம் பற்றி பேசுபவையாகும்.