ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை சுற்று சுவருக்குள் நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்க்கும் மேல்முறையீட்டு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


அணிவகுப்பு ஊர்வலத்தை வரும் 29-ஆம் தேதி நடத்த கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது எனவும் ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது. 


நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டி, அனுமதியளிக்குமாறு, வழங்கப்பட்ட விண்ணப்பம் ஏற்புடையதல்ல என்றும் காவல்துறை தெரிவித்தது.


இதையடுத்து, ஜனவரி 19-ஆம் தேதிக்குள்,  தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.


வழக்கு:


தமிழ்நாட்டில் உள்ள 50 இடங்களில் கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி, ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது. 


தமிழ்நாட்டில் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 இடங்களில் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்து,  இதர 44 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு நடத்தி கொள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனவரி 29 ஆம் தேதி அணிவகுப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கு அனுமதி அளிக்க கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி காவல்துறையிடம் விண்ணப்பித்து இருப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்த வழக்கில், கடந்த முறை நீதிபதிகள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் அனுமதி வழங்க மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட முறையில் வழங்கப்படவில்லை என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாவட்ட வாரியாகத்தான் முடிவு எடுக்க முடியும் என்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் அனுமதி வழங்க முடியாது என்றும் காவல்துறை தெரிவித்தது. 


இதை கேட்ட நீதிபதிகள், இதே போன்ற நடைமுறைதான், மற்றவர்களுக்கும் பின்பற்றப்படுகிறதா என்றும், இது குறித்து காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசு வரும் 19 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது. மேலும், இவ்வழக்கை வரும் ஜனவரி 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


Also Read: Governor RN Ravi: ஆளுநரை தகுதி நீக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்... பின்னணி என்ன?...