முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.25.56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 13 மணி நேரத்திற்கும் மேலாக 26 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை கூறியுள்ளது. மேலும், காப்பீடு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள், பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிவரம்:


தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி 
விஜயலட்சுமி, அவரது தம்பி சேகர் ஆகியோர் பெயரிலும் மற்றும் தான் பங்குதாரராக உள்ள
நிறுவனங்கள் பெயரிலும் தனதுபணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்துள்ளது சம்பந்தமாக அவர்கள் மீது கடந்த 21.07.2021ஆம் தேதி கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் குற்ற எண்.5/AC/2021 பிரிவு 13(2) r/w 13(1)(b) of the PC (Amendment) Act, 2018 மற்றும் பிரிவு 12 r/w 13(2) r/w 13(1)(b) of the PC (Amendment) Act, 2018-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. மேற்படி வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட மொத்தம் 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் இன்று 22.07.2021ஆம் தேதி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் பணம் ரூ.25,56,000/- மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள்மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள்கைப்பற்றப்பட்டன. விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.




இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் இல்லங்களில்தான் முதலில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுவந்த நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரை முதலில் குறி வைத்து ரெய்டு நடத்தப்பட்டதன் பின்னணியில் செந்தில்பாலாஜி உள்ளதாக கூறப்படுகிறது.
அவர்தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாங்கி குவித்த சொத்து விவரங்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கொடுத்துள்ளார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


சோதனை நடைபெற்ற இடங்கள் :


* போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வாகனங்களில் பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் வாங்குவதிலும் மற்றும்  வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதிலும் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் பெற்றுள்ளது என புகாரின் அடிப்படையில்  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.


* எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமாக கரூரில் உள்ள வீடு மற்றும் ரெயின்போ என்ற பெயரில் அவர் நடத்தும் நிறுவனங்களான கல்குவாரிகள் ,சாயப்பட்டறை,மற்றும் அட்டைப் பெட்டி தயாரிப்பு நிறுவனம்,  எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரரான சேகர் நடத்தும் நிறுவனங்கள் மற்றும் அவரது மனைவி சாந்தி பெயரில் உள்ள நிறுவனத்திலும் அதிகாலையிலையே லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர்  சோதனையில் ஈடுபட்டனர்.


* ஆட்சியில் இருக்கும் போது எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அரசு உதவியாளராக இருந்த கார்த்திக் மற்றும் தனி உதவியாளராக இருந்த ரமேஷ் ஆகியோர் வீட்டிலும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  


* அத்துடன் அதிமுக கட்சியில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நெருக்கமாக இருந்த ஏகாம்பரம், பரமசிவம் உறவினரும் ரியல்எஸ்டேட் புரோக்கருமான சேகர் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.