திருச்சியில் பிரபல ரவுடியாக வலம் வந்த கொம்பன் ஜெகனை காவல்துறை என்கவுண்ட்டரில் சாய்த்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 


17 வயதில் தொடக்கம்:


கடந்த 2004-ல் திருச்சியில் ரவுடிகள் சேட்டு, டிங்கு, சுரேஷ் ஆகிய மூன்று பேர் ஒரே நேரத்தில் கொலை செய்யப்பட்டனர். மாநிலம் முழுவதும் அதிர வைத்த இந்த கொலை வழக்கில் பிரபல முட்டை ரவி, மண்ணச்சநல்லூர் குணா, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தது காவல்துறை. திருச்சியில் பிரபல தாதாவாக வலம் வந்த முட்டை ரவியின் கதையை 2006ல் என்கவுண்ட்டரில் முடித்தது காவல்துறை.


முட்டை ரவிக்குப் பிறகு திருச்சியின் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட ரவுடித்தனங்கள் மண்ணச்சநல்லூர் குணாவின் கண்ட்ரோலுக்கு வந்தது.  மண்ணச்சநல்லூர் குணாவை தெரியாத ரவுடிகள், காவல்துறையினரே இருக்கமுடியாது. திருச்சியின் பிரபல ரவுடிகளாக வலம் வந்த முட்டை ரவி, மணல்மேடு சங்கர், பிச்சமுத்து ஆகியோரின் கதையை காவல்துறை முடிக்க, போட்டி இல்லாததால் குணாவின் ஆட்டம் ஆரம்பமானது. தனது சகாக்கள் சுந்தர பாண்டியன் உள்ளிட்டோருடன் ரவுடித்தனங்களில் ஈடுபட இந்த குரூப்புடன் இணைகிறார் 17 வயதான ஜெகன். திருவெறும்பூர் அருகே உள்ள பணயகுறிச்சியை சேர்ந்த லாரி டிரைவர் முத்துக்குமார் .இவரது மனைவி சரஸ்வதி இவர்களது மகன்கள் மூத்தவர் தங்கவேல். இளையவர்  ஜெகன்.


ஜெகன், சுந்தர பாண்டியன் கேங்:


இஞ்சியினியரிங்கில் டெலி கம்யூனிகேசன் படிப்பை படித்துக்கொண்டிருந்தவர் பாதை மாறி ரவுடிசத்தில் இறங்குகிறார். அப்போது குணா கும்பலுடன் தொடர்பு கிடைக்க அவர்களுடன் சேர்ந்து அடிதடி போன்ற சிறு சிறு சம்பவங்களை செய்கிறார். குணாவுக்கு இருந்த விசுவாசமான தளபதிகளில் சுந்தரபாண்டியனுடன் ஜெகனும் ஒருவர். இவர்களுடன் மற்றொரு ரவுடி டைவ் குணாவும் சேர்ந்துகொள்கிறார். முட்டை ரவியைப் போலவே குணாவுக்கும் காவல்துறை நாள் குறித்திருப்பது அறிந்து தன்னை பழங்குடியினருக்கு ஆரவாளராகக் காட்டிக்கொண்டு அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து 2009-களில் ரவுடிசத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டார்.


அடுத்தடுத்து கொலை:


 அவருக்குப் பிறகு திருச்சியில் கெத்துக்காட்ட ஆரம்பித்தது ஜெகன், சுந்தரபாண்டி கேங். 2010ல் பஞ்சாயத்து தலைவரை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு 2013 வரை கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் கைதாகி சிறைக்குப்போவதும், வெளியே வருவதுமாக இருந்துள்ளார். திருச்சி புத்தூர் சீனிவாசன் நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மகனை காதல் விவகாரத்தில் போட்டுத்தள்ளி 2014ல் முதல் கொலையை ஆரம்பிக்கிறார்.


பின்னர் ஜாமீனில் வெளியே வந்து மற்றொரு கொலை முயற்சி வழக்கில் சிறை சென்று வெளியே வந்தவர் 2015ல் தி.மு.க கவுன்சிலர் சக்திவேல் என்பவரை கொலை செய்து மீண்டும் சிறை செல்கிறார். ஜெகனின் ஆட்டம் அதிகமானதால் முதல்முறையாக அவரை குண்டாஸில் அடைத்தது காவல்துறை. அதன்பிறகு 2016ல் ரவுடி சந்துருவை கொலை செய்ய முயற்சி செய்து, கைதாகி சிறைக்குப் போன ஜெகன் மீண்டும் வெளியே வந்தார்.


 


2017-ல் ஜெகனின் நண்பனான ஜீவாநகரைச் சேர்ந்தவ் டைவ் மணியை போட்டுத்தள்ளியது 3 பேர் கும்பல். இதனால் ஆத்திரமடைந்த ஜெகன் தன் நண்பனை கொன்றவர்களை சும்மா விடமாட்டேன் என்று இறங்கி அடுத்தடுத்து 3 கொலைகளை செய்தவர், 2017ல் ரவுடி ஓடத்துறை சசி என்கிற சசிக்குமாரை சுந்தரபாண்டியுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டினார். 2018 ஒரு கொலை முயற்சி, 2019ல் மற்றொரு கொலை என்று ரவுடித்தனம் செய்வதும் சிறைக்குப்போவதுமாக இருந்தார். அப்படி  சிறையில் இருந்தபோது பழக்கமானவர் தான் மற்றொரு ரவுடி வேலூரைச் சேர்ந்த வசூர் ராஜா. ஒரு ரவுடிக்கு இன்னொரு ரவுடி உதவிக்கொள்வது சகஜம் தானே என்று வசூர் ராஜாவுக்காக திருவண்ணாமலையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்த பங்க் பாபுவை 2020ல் கொலை செய்தார்.


திருச்சியின் ஒற்றைத் தாதா:


2017ல் அதிமுகவைச் சேர்ந்த கனகராஜை பங்க் பாபு கொலை செய்ய, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜெகனை வைத்து பங்க் பாவுவின் கதையை முடித்தார். இடையில் ஜெகனின் நெருங்கிய கூட்டாளியான சுந்தரபாண்டிக்கு காவல்துறை ஸ்கெட்ச் போட, அதை அறிந்து சுந்தரபாண்டியும் அரசியலில் சேர்ந்து ஒதுங்கிக்கொண்டார். 2004ல் நடந்த மூன்று பேர் கொலையில் மண்ணச்சநல்லூர் குணா, சுந்தரபாண்டியனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தனி ஒருவனான ஜெகன் திருச்சியின் ஒற்றை தாதாவாக வலம் வரத்தொடங்கினார். அதே 2020ல் சேலத்தில் இன்னொரு ரவுடியையும் தீர்த்துக்கட்டினார். சிறைக்குப்போவதை  பிக்னிக் போவதை போல வழக்கமாகவே கொண்டிருந்ததால் சிறையின் உள்ளேயே ஜெகனுக்கு ஒரு கேங் ஃபார்ம் ஆனது.


கொம்பன் ஜெகன்:


திருச்சி சிறையில் இருந்தபோது மற்றொரு ரவுடி வினித் என்பவருக்கும், ஜெகனுக்கு மோதல் ஏற்பட சிறையினுள்ளேயே இரு கும்பலும் அடித்துக்கொண்டது. அதன்பிறகு, மற்றொரு வழக்கில் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, மற்றொரு ரவுடி சுபாஸ் சந்திரபோஸுடன் சேர்ந்துகொண்டு ஆதிநாராயணன் என்ற கைதியை தாக்கியதால் மோதல் ஏற்பட்டு சிறைக்கைதிகள் மதில் சுவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


தொடர் ரவுடிசத்தால் ரவுடி ஜெகனின் பிம்பம் டெல்டாவில் பெரிதாக வேலைவெட்டிக்குப் போகாத பல்வேறு தறுதலைகளின் நாயகனாக உயர்ந்தார் ரவுடி ஜெகன். ரவுடி ஜெகன் கொம்பன் படத்திற்கு பிறகு கொம்பன் ஜெகன் ஆனார். ஜெகனுக்கு மாஸ் பி.ஜி.எம். போட்டு ரீல்ஸ் போடுவது, கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்படுவதை கெத்தாக சித்தரிப்பது என்று சிறுவயது இளைஞர்களும் ஜெகனின் பாதையில் சீரழியத்தொடங்கினர்.


என்கவுண்டர்:


இந்த ஆண்டு மே மாதம் ரவுடி ஜெகனின் அடிபொடிகள் அவரது பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடியதோடு காரில் ஊர்வலம் நடத்தியுள்ளனர். ஒரு ரவுடிக்கு இவ்வளவு செல்வாக்கா? நாட்டில் சட்டம் ஒழுங்கு இந்த அளவுக்கு சந்தி சிரிக்கிறதாக் என்று விமர்சனம் எழுந்த நிலையில்,  நன்பர்களுக்கு கிடா வெட்டி விருந்து வைத்த ஒரு நன்நாளில் ஜெகன் மற்றும் அவரது கூட்டாளிகளை கொத்தாக தூக்கியது போலீஸ். தன் முந்தைய கூட்டளிகள், குணா, சுந்தரபாண்டியன் போலவே தனக்கும் நாள் குறிக்கப்படுவதை உணர்ந்த ஜெகன் ரவுடிசத்தை விட முயற்சித்திருக்கிறார்.


ஆனால் கத்தியை எடுத்தவன் கை சும்மா இருக்குமா? காவல்துறையினர் மீதே சில மாதங்களுக்கு முன்பு கைவைக்க துணிந்திருக்கிறார் ஜெகன். திருச்சி எஸ்பியாக வருண்குமார் பொறுப்பேற்ற பிறகு ரவுடிகள் மற்றும் போதைப்பொருள்களை ஒழிக்க தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் தான் இன்று  திருச்சி மாவட்டம் சனமங்கலம் அருகே இருந்த ரவுடி கொம்பன் ஜெகனை போலீசார் பிடிக்க முயன்றுள்ளனர்.காவல் உதவி ஆய்வாளர் வினோத்தை தாக்கிவிட்டு ரவுடி கொம்பன் ஜெகன் தப்ப முயன்ற போது போலீசார் என்கவுண்டர் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  பலியான கொம்பன் ஜெகனின் பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்கவுண்டர் சம்பவத்தில் காயம் அடைந்த எஸ்.ஐ. வினோத் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 


60 வழக்குகள்:


29 வயதாகும் ஜெகன் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, கொலை முயற்சி என்று திருச்சி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, சேலம் , திண்டுக்கல், நாமக்கல், புதுச்சேரி என்று பல்வேறு இடங்களில் 60க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்த நிலையில், இதற்கும் மேல் வழக்குகள் ஏறாதவாறு கதை முடிந்திருக்கிறது. ரவுடியான பின் 8 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருக்கிறார் ஜெகன்.


ஜெகனின் முன்னோர் ரவுடிகளான முட்டை ரவி, மண்ணச்சநல்லூர் குணா, சுந்தரபாண்டியன் கூட இத்தனை முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்படவில்லை. ரவுடியான பின் வெளியில் இருந்த நாள்களைக்காட்டிலும் ஜெயிலில் தான் இருந்திருக்கிறார் ஜெகன். ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் எடுக்கும் அளவிற்கு திரைக்கதைக் கொண்ட ஜெகனின் வாழ்க்கை 30 வயதிற்குள்ளேயே முடிவுக்கு வந்திருக்கிறது.  ஜெகனை ஹீரோவாகக் கொண்டாடும் இளைஞர்களுக்கும் அவரது முடிவு ஒரு பாடமாக இருக்கட்டும் என்று கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.