75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார். 


1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் 75வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 






இதனிடையே தமிழ்நாட்டிலும் அனைத்து இடங்களிலும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தப் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அப்போது ஹெலிகாப்டர் மூலம் தேசிய கொடி மீது மலர்தூவப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராணுவம், கடற்படை, விமானப்படை, தமிழ்நாடு காவல்துறை, தேசிய மாணவர் படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.


இதன்பின்னர் அண்ணா, கோட்டை அமீர், முதலமைச்சர் சிறப்பு விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களின் நடனங்களுடன் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டு ரசித்தனர். இதன் பின்னர் அனைத்து துறைகளின் அலங்கார ஊர்திகள் அணி வகுப்பு நடைபெற்றது.  



முன்னதாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வந்தார். இந்த குடியரசு தின நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், அரசு அதிகாரிகள்,பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர். குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் நகரின் சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.