காலத்தைவென்ற அரசியலமைப்பை வழங்கிய அம்பேத்கருக்கு நன்றியை உரித்தாக்குகிறோம் என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். 


74வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினாவில் நடைபெறும் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி. தேசிய கொடி ஏற்றுகிறார். 


1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய நாட்டிற்கென தனி அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்த நாள் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 தேதி தான். அந்த நாளே குடியரசு தினமாகும்.  அதன்படி இந்திய நாட்டின் 74வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 


இந்தநிலையில், 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கவர்னர் மாளிகை ட்விட்டர் பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த பதிவில், “ பாரதத்தின் 74வது ஆண்டு குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் எனது அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், உலகெங்கும் வாழும் தமிழ் நாட்டு மக்களுக்கும் எனது உளப்பூர்வ வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளில், அற்புதமான அறிவாற்றல் மற்றும் அசாதாரண தொலைநோக்குடனும் காலத்தை வென்ற அரசியலமைப்பை வழங்கிய பாபா சாகேப் டாக்டர்.பி.ஆர். அம்பேத்கருக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். அந்த அரசியலமைப்பு தான் ஒரு வலுவான பன்முக ஜனநாயகமாக இந்தியா வளர உதவியது. 






இந்நாளில் சுதந்திரத்துக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த மற்றும் சொல்ல முடியாத சித்ரவதைகளை அனுபவித்த துணிச்சலான வீர மகன்கள் மற்றும் மகள்களை தேசம் நன்றியுடன் நினைவு கூர்கிறது. நம் தாய் திருநாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் அவர்கள் தங்கள் ரத்தம், வியர்வை மற்றும் தியாகங்களால் பாதுகாத்தனர். 


இந்த நாளில் வ.உ. சிதம்பரம் பிள்ளை, மகாகவி சுப்பிரமணிய பாரதி, வீரமங்கை ராணி வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், விருப்பாச்சி கோபால் நாயக்கர், சுப்பிரமணிய சிவா, மாவீரன் அழகுமுத்து கோன், வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை ஆகியோருக்கு நெஞ்சார்ந்த மரியாதையை செலுத்துவோம். தீரன் சின்னமலை, புலி தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், வி.வி.எஸ். அய்யர், சிங்காரவேலர், ருக்மணி லட்சுமிபதி, தில்லையாடி வள்ளியம்மை, குயிலி, சுந்தர சாஸ்திரி சத்தியமூர்த்தி, அஞ்சலை அம்மாள் மற்றும் சுதந்திரத்துக்காக தங்களால் இயன்ற அனைத்தையும் வழங்கிய பலருக்கும் மரியாதை செலுத்துவோம்.






இந்திய தேசிய சுதந்திர போராட்டத்தின் போது எல்லா இடர்பாடுகளுக்கும் எதிராகத் தங்களுக்குத் துணையாக நின்ற இந்தப் பெரிய மனிதர்கள் மற்றும் பெண்களின் குடும்பத்தினரை நாம் மிகுந்த நன்றியுடன் நினைவுகூர்கிறோம். இந்நாளில் நமது ராணுவத்துக்கு வணக்கம் செலுத்துவோம். பாரத இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை காத்து, எதிரி நடவடிக்கைகளை முறியடித்து இன்னுயிரை தியாகம் செய்த தீரம் மிக்க நம் வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது. அவர்களின் தியாகங்களுக்காக தேசம் எப்போதும் பெருமிதம் கொள்ளும்.” என பதிவிட்டு இருந்தார்.