புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி கிராமத்திலுள்ள பட்டியல் சமூகத்தைச் (SC) சேர்ந்தவர்களுக்கு முடி திருத்துவதில்லை எனும் புகார் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


 

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காடு பகுதியை சேர்ந்த செல்வம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தில் 600 குடும்பங்கள் வசிக்கும் நிலையில்  150 குடும்பங்கள் பட்டியல்  சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.  இவர்கள் மிக ஏழ்மையான நிலையில் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் கூலித் தொழிலாளியாக உள்ளனர். 

 

இந்நிலையில், புதுப்பட்டி கிராமத்தில் கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக 3 முடி திருத்தும் நிலையங்களும், 1 சலவை நிலையமும் உள்ளது. ஆனால், இங்கு செயல்படும் முடி திருத்தும் நிலையத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முடி திருத்தம் செய்வது இல்லை.

 

எனவே, புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி கிராமத்திலுள்ள முடி திருத்தும் நிலையத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முடி திருத்துவதில்லை எனும் புகார் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ்உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு,"அது உண்மையாய் இருப்பின் மிகப்பெரிய பிரச்சனை. குறிப்பிட்ட சமூகத்திற்கு என பிரத்யோகமான முடி திருத்தும் நிலையம் உள்ளதா? ஏன் இது போன்ற பாகுபாடு உள்ளது? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, வழக்கு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதில்  மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.


 

 


இளையான்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

 

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் சுமார் 650 ஏழை மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஓவிய ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர் ஆகியோர் இல்லாத நிலை உள்ளது. மாணவர்கள் படிப்பதற்கு போதிய வகுப்பறைகள் இல்லை. 

 

மரத்தின் அடியில் அமர்ந்து படிக்க கூடிய நிலை உள்ளது. உயர் வகுப்பு மாணவர்களுக்கு  தேவையான ஆய்வகம் மற்றும் மாணவர்களுக்கான போதிய கழிவறை வசதிகள் இல்லை. பள்ளி சுற்று சுவர்கள் இல்லை என்பதால் பள்ளி வேலை நேரத்திலும்,  பொதுமக்கள் பள்ளிக்குள் வந்து செல்லும் நிலை உள்ளது. எனவே, இளையான்குடி பகுதியிலுள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கு  தேவையான ஆசிரியர்களை நியமித்து, ஆய்வுகூடம், கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர  உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். 

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்து உரிய கால அவகாசம் வழங்காமல் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்" என கூறினர்.இதனையடுத்து மனுதாரர் வழக்கை திரும்பப் பெறுவதாக கூறியதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.