நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளை ரயில்வே அமைச்சகம் முடுக்கிவிட்டுள்ளது. தற்போது 40 ரயில் நிலையங்களில் நவீன வசதிகளை ஏற்படுத்துவதற்காக மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 14 ரயில் நிலையங்களை மறுசீரமைக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இவற்றுக்கான பணிகள் அடுத்த 5 மாதங்களில் தொடங்கும். நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்வதன் மூலம், வேலை வாய்ப்பு அதிகரிப்பதுடன் மேம்பட்ட பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு, அது பொருளாதாரத்தில் பல மடங்கு சிறந்த விளைவுகளை உருவாக்கும்.


பரந்த அளவில் மேற்கூரைகளை விரிவுபடுத்துவது, வசதியான காத்திருப்பு அறைகள், உணவகங்கள், குழந்தைகள் விளையாடும் இடங்கள், உள்ளூர் பொருட்களை விற்பனை செய்வதற்கான விற்பனை மையங்கள் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக கொண்டு இந்த மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.  


மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட பலதரப்பட்ட போக்குவரத்து வசதிகளை ஒருங்கிணைத்து நகரங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்பு ஏற்படுத்தும் வகையில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.


 






பசுமை கட்டமைப்பு தொழில்நுட்பத்துடன் மேற்கொள்ளப்படும் இந்த பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அமைக்கப்படும். பயணிகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய அம்சங்களை கொண்டதாக இந்த ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.  


தமிழ்நாட்டில் சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், காட்பாடி, மதுரை மற்றும் கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மொத்தம் 14 ரயில் நிலையங்களை மேம்படுத்த ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ரயில் நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் அடுத்த 4 முதல் 5 மாதங்களில் இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கும்.