கரூர் அருகே பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான 11.61 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. பொக்லைன் எந்திரம் உதவியுடன் வணிக கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டது.


 




கரூர் மாவட்ட நீதிமன்ற உத்தரவின்படி வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திற்கு சொந்தமான கோவில் நிலத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்கும் பணியில்  ஈடுபட்டனர்.  பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 11.61 ஏக்கர் நிலத்தில் வணிக கட்டிடங்கள், கடைகள்  குடியிருப்புகள், உள் வாடகைக்கு விடப்பட்ட வீடுகள் ஆகியவை ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்தது கண்டறியப்பட்டு, பொக்லைன் எந்திரம் கொண்டு வணிக கட்டிடங்கள் மற்றும் கடைகள் மட்டும் இடித்து அகற்றப்பட்டன. மீதமுள்ள ஆக்கிரமிப்பு நிலங்களில் இருந்த ஆக்கிரமிப்புதாரர்களின் தனிநபர் குடியிருப்புகள் மட்டும் நிபந்தனையின் பேரில் பயன்படுத்திக் கொள்ள விடப்பட்டன. 


 




 


மேலும் ஆக்கிரமிப்புதாரர்கள் வருவாய் ஈட்டும் நோக்கத்தில் கட்டிடங்கள் கட்டி வட மாநில தொழிலாளர்களை உள்வாடைக்கு வைத்திருக்கும் வீடுகளை இடித்து அகற்ற உத்தரவிடப்பட்டது. வாடகைக்கு குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் இடத்தை காலி செய்யவும் அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியின்போது மூதாட்டி ஒருவர் வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு அழுது புழம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.


 




 


இந்து சமய அறநிலையத்துறை கரூர் மாவட்ட உதவி ஆணையர் ஜெயதேவி மற்றும் நந்தகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கோவில் நிலம் மீட்பு பணியில் கோவில் செயல் அலுவலர் சரவணன், தனி வருவாய் வட்டாட்சியர் பன்னீர்செல்வம், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர். பாதுகாப்பு பணியில் 50க்கும் மேற்பட்ட போலீசார்  ஈடுபடுத்தப்பட்டனர்.