புதுச்சேரி: புதுச்சேரியில் தீபாவளி பரிசு தொகுப்பாக இலவச அரிசி, சர்க்கரை அக்டோபர் 21-ம் தேதி ரேஷன் கடைகளில் வழங்கப்படும். தொடர்ந்து ரேஷனில் இலவச அரிசி வழங்குவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது என புதுச்சேரி முதலமைச்சார் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.


தீபாவளி பரிசு : 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி


புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: 


புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு அக்டோபர் 21-ம் தேதி தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை வழங்கப்படும். அதைத்தொடர்ந்து ரேஷனில் மாதா மாதம் இலவச அரிசி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மாற்றுத் திறனாளிக்கான உதவித் தொகை


புதுச்சேரியில் ஏற்கெனவே அறிவித்தபடி, மாற்றுத் திறனாளிக்கான உதவித் தொகை ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளது. இப்போது மாதம் ரூ.2000 உதவித் தொகை பெறுபவர்கள் இனி, ரூ.3,000 உதவித் தொகை பெறுவார்கள். அதேபோல் ரூ.2500, ரூ.2700, ரூ.3500, ரூ.3800 உதவித் தொகை பெறுவோர் இனி கூடுதலாக ரூ.1000 சேர்த்து பெறுவர். உயர்த்தப்பட்ட உதவித் தொகையின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.24.5 கோடி கூடுதலாக செலவாகும். இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதியில் 21,329 பயனாளிகள் பயன்பெறுவர். இந்த உயர்த்தப்பட்ட உதவித் தொகை அக்டோபர் 2024-ம் தேதி முன் தேதியிட்டு நவம்பர் மாதம் முதல் சேர்த்து வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி கூறினார்.


அது அவர்கள் விருப்பம்!


தொடர்ந்து, விஜய் கட்சி மாநாட்டு பேனரில் ரங்கசாமியின் படம் இடம் பெற்றிருப்பது தொடர்பாக அவரிடம் கேட்டதற்கு, விஜய் மாநாட்டுக்கு வாழ்த்துகள். விருப்பம் உள்ளோர் பேனரில் என் படத்தை போடுகிறார்கள். அது அவர்கள் விருப்பம் என முதல்வர் ரங்கசாமி கூறினார்.


விவசாய கடன்கள் தள்ளுபடி


புதுச்சேரியில் விவசாயிகள் பெற்ற கடன் ரூ.13 கோடி உள்ளது. இதில் முதல் கட்டமாக ரூ.12 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். தீபாவளிக்கு முன்பாகவே அந்த கடன் தள்ளுபடியை செய்து தீபாவளி பரிசாக கொடுக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கூறியுள்ளார். ஆகவே தீபாவளிக்கு முன்பாகவே அந்த கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு கிடைக்கும்.


தீப ஒளித்திருநாள்


தீபாவளி (Deepavali, Diwali) திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா இலங்கை சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீச்சு ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது.


தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை நாளன்று கொண்டாடப்படுகிறது. கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் 17ஆம் நாளிலிருந்து நவம்பர் 15ஆம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது. இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிசி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா, சிங்கையில் வாழும் இந்தியர்களும், தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்