கடந்த 1991 ஆம் ஆண்டு, மே மாதம், ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ராஜீவ் காந்தி, மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.


ராஜீவ் காந்தி கொலை வழக்கு:


இது, தொடர்பாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.  28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த 2022 மே மாதம் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.


விடுதலை செய்யப்பட்டவர்களில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் இந்தியர்கள் என்பதால் அவர்கள் தமிழ்நாட்டிலேயே வசித்து வருகின்றனர். ஆனால், மற்றவர்கள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் வசித்து வந்தனர்.


இதற்கிடையே, இலங்கைக்கு சென்று தங்களின் குடும்பத்தினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் என இந்திய, இலங்கை அரசுகளிடம் அனுமதி கோரி வந்தனர். ஆனால், விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான சாந்தனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சிகிச்சை பெற்று வந்தார்.


இலங்கை சென்ற முருகன்:


அவருக்கு இலங்கை செல்ல அனுமதி வழங்கப்பட்டபோதிலும், கல்லீரல் பாதிப்பால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி சமீபத்தில் உயிரிழந்தார்.


இந்த நிலையில், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு இலங்கை அரசு அண்மையில் பாஸ்போர்ட் வழங்கியது. இதையடுத்து, தங்களின் தாயகமான இலங்கைக்கு அவர்கள் திரும்பியுள்ளனர். மூன்று பேரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.


விடுதலை செய்யப்பட்டு தற்போது இலங்கை திரும்பியுள்ள முருகன், ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் ஒருவரான நளினியின் கணவர் ஆவார். இலங்கைக்கு செல்ல சென்னை விமான நிலையம் வந்த முருகனுடன் நளினியும் உடனிருந்தார். விமானத்தில் புறப்பட்டு செல்வதற்கு முன்பு நளினியுடன் முருகன் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தார்.


நளினியின் மகள், தற்போது பிரிட்டனில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். எனவே, தன்னுடைய மகளுடன் சேர்ந்து வாழ நளினி முயற்சித்து வருகிறார். இதற்காக, பிரிட்டன் செல்வதற்கான விசாவை பெற நடவடிக்கை எடுத்து வருகிறார். முருகனையுடம் இலங்கையில் இருந்து பிரிட்டன் அழைத்து செல்ல நளினி குடும்பம் முயற்சி செய்து வருகிறது. 


இதையும் படிக்க: TN CM Stalin Wishes: தேசத்துக்கான சேவையில், 33 ஆண்டுகள்.. மன்மோகன் சிங் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் புகழுரை..!