Rain Alert: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கவுள்ளதால் தமிழகம் முழுவதும் 7 இடங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 


காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை கரையைக் கடக்கவுள்ளதால் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. மழைப் பொழிவும் அதிகரித்து வருவதால்,  நாகை, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை, கடலூர், காட்டுப்பள்ளி, எண்ணூர் துறைமுகங்களிலும் 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 


மேலும், வங்ககடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை வலுவிழக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக- புதுச்சேரி கடற்கரை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் எனவும், காலை 5.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே 450 கிலோ மீட்டர் தொலைவில் மண்டலம் மையம் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா, வட தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இதனால் வங்கக் கடலில், 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. 


மழைக்கான வாய்ப்பு:


21.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும்,  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  விழுப்புரம், செங்கல்பட்டு,  காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


22.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும்,  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


23.11.2022 மற்றும் 24.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை,  24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். 


மீனவர்களுக்கு எச்சரிக்கை:


20.11.2022 முதல் 22.11.2022 வரை: ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக - புதுவை கடலோரப்பகுதிகள்,  இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல்   மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


21.11.2022 மற்றும் 22.11.2022:  மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட பகுதிகளுக்கு மீனவர்கள், மீன் பிடிக்க செல்ல வேண்டாமென மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.