புதுச்சேரி: அரசு பெண் ஊழியர்களுக்கு வேலை நேர சலுகை அறிவித்திருப்பது ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தத்தை அரசு ஊழியர்கள் மூலம் மக்களிடம் திணிக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர்  சிவா கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: –


‘அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பு எதற்கு?’ என்று கேட்ட காலத்தில், சமையல் கரண்டி பிடித்திருக்கும் கையில், புத்தகத்தைக் கொடுங்கள் என்று சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள். அவரைப் போன்ற சீர்திருத்த வாதிகளால்தான் பெண் சமூகத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றம் நிகழத் தொடங்கியது என்றால் அது மிகையாகாது. ஒவ்வொரு பெண்ணும் சமூக அடிமைத்தனம், பொருளாதார அடிமைத்தனம், ஆண் அடிமைத்தனம் என்கிற மூன்று அடிமைச் சக்திகளுக்கு அடிமைப்பட்டு விடாமல் இருக்க எண்ணற்ற செயல்திட்டங்களை பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் காட்டிய வழியில், பேரறிஞர் அண்ணா அவர்களும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் செயல்படுத்தினார்கள்.


ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம், கைம்பெண் மறுமணத் திட்டம், அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு, சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை, கர்ப்பிணி தாய் மார்களுக்கு மாதாந்திர நிதியுதவி, ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் போன்ற எண்ணற்ற பெண்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தினார்கள்.


அவர்கள் வழியில் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெண்ணுரிமை என்பதை வெறும் சொற்களால் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் கையெழுத்திட்ட ஐந்து கோப்புகளில் முதலாவதாக அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் தொடங்கி, நித்தமும் எண்ணற்ற புரட்சித் திட்டங்களால், திராவிட மாடல் ஆட்சியை தனக்கே உரிய பாணியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறப்பாக செயல்படுத்தி இந்தியாவிற்கே முன்னோடியாக திகழந்து வருகிறார்கள்.


இப்படி சமூக நலனிலும், பெண்கள் நலனிலும் அதீத அக்கறை கொண்ட இயக்கத்தின் வழிநின்று செயலாற்றிடும் நாங்கள் பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களை புதுச்சேரி அரசு கொண்டு வரும்போது அதை வரவேற்க தவறமாட்டோம். அதே நேரத்தில் பெண்கள் நலம் என்ற பெயரில் ஆர். எஸ்.எஸ்., சித்தாந்தங்களை புகுத்த நினைக்கும்போது அதை எதிர்க்கவும் தயங்க மாட்டோம். அந்த வகையில் புதுச்சேரி அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு வாரத்தில் ஒருநாள் வெள்ளிக்கிழமை அன்று மட்டும் இரண்டு மணி நேரம் வேலைக் குறைப்பு செய்யப்படுவதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அவர்கள் முதல்வர் ரங்கசாமி அவர்கள் முன்னிலையில் நேற்று அறிவிப்பு செய்துள்ளது பெண் அடிமைத்தனத்தை ஊக்குவிப்பதாக நாங்கள் கருதுகிறோம்.


பெண்களின் வாழ்நாளை முழுவதுமாக விழுங்கும் வீட்டு வேலைகளையும், பூஜை வேலைகளையும் முடிக்க நேரம் காலம் உண்டா? வெள்ளிக்கிழமை காலைக்கு பதில் மாலை 2 மணி நேரம் முன்னதாக நீங்கள் வீட்டிற்கு செல்லலாம் என்று சொன்னால், ஒரு வாரம் வேலை செய்து விட்டு, வார இறுதி நாளில் ஓய்வில் குடும்பத்தினருடன் செலவழிப்பதில் ஒரு மகிழ்விருக்கும். யாருக்குமே பயனின்றி அறிவித்திருக்கும் இந்த 2 மணி நேர சலுகை பெண்களை பலவீனப்படுத்துவதாகவே உள்ளது.


கடந்த மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் போதிய நிதி ஆதாரம் இல்லாத போதும் எண்ணற்ற திட்டங்களை முதல்வர் அவர்கள் அறிவித்தார்கள். அரசு பேருந்தில் அனைத்து பெண்களும் இலவசமாக பயணம் செய்யலாம், மகளிருக்கான கேஸ் சிலிண்டர் மானியம் ரூ. 300 வழங்கப்படும், பெண் குழந்தை பிறந்தால் ரூ. 50 ஆயிரம் வைப்பு நிதி கொடுக்கப்படும், ஏழை பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும், பெண்கள் பிரத்யேகமாக பயணிக்கும் வகையில் ‘பிங்க்’ நிற பேருந்து வாங்கப்படும் என பெண்களுக்கு மட்டும் எண்ணற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.


முதல்வரின் இந்த அறிவிப்பை மக்களோடு சேர்ந்து நாங்களும் வரவேற்பு செய்தாலும், அதற்கான நிதி ஆதாரத்தை கூறுங்கள் என்றோம். அதற்கு அரசு சார்பில் எந்த பதிலும் இல்லை. ஆனாலும் முதல்வர் செய்வார் என்ற நம்பிக்கையில் நாங்களும் இருந்து வருகிறோம். முதல்வர் அறிவிப்பு செய்து ஒரு மாதம் ஆன நிலையில் அந்த திட்டங்களுக்கு ஆளுநர் அனுமதி அளித்தாரா? அதற்கான நிதி ஆதாரம் கிடைத்ததா? போன்ற எந்த தகவலும் அரசு தரப்பில் இருந்தும், ஆளுநர் தரப்பில் இருந்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.


அதேபோல், ஹைடிசைன் போன்ற பல தொழிற்சாலைகளில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு இருப்பதும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய தொழிலாளர் துறை தொழிற்சாலை நிர்வாகத்திற்கு பக்க பலமாக இருப்பதும் அதன் காரணமாக பெண் தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது குறித்து ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் செயல்பாட்டிற்கு வந்தபிறகு பெண்கள் பணியாற்றும் நிறுவனங்களில் அமைக்கப்பட வேண்டிய புகார் கமிட்டிகள் மற்றும் விசாகா கமிட்டி ஆகியன முறையாக அமைக்கப்பட்டு செயல்படுவது இல்லை. இதனை அரசு கண்காணிப்பதும் இல்லை. செயல்படாமல் உள்ள மகளிர் ஆணையத்தை செயல்படுத்த நடவடிக்கை இல்லை.


இப்படி பெண்களின் சமூக மற்றும் பணி பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் இருக்கும் இந்த அரசு தமது கூட்டணி கட்சியின் சித்தாந்தத்தை பெண்கள் மத்தியில் திணிக்கும் முயற்சியாகவே ஆளுநரின் அறிவிப்பை பார்க்க முடிகிறது. அரசுத் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு வெள்ளிக் கிழமைகளில் காலையில் இரண்டு மணிநேரம் விளக்கு என்பதை மாலையில் மாற்ற அரசு பரிசீலனைச் செய்ய வேண்டும். பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அரசியல் சித்தாந்தங்களை அரசு ஊழியர்கள் வழியாக மக்களிடம் புகுத்த முற்பட்டால் அதை திராவிட முன்னேற்றக் கழகம் வேடிக்கை பார்க்காது என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.