சுபகிருது ஆண்டு நிறைவடைந்து  சோபகிருது தமிழ்ப்புத்தாண்டு பிறந்தது. இதையொட்டி பொதுமக்கள் அதிகாலையில் கோயில்களில் குவிந்து இறை வழிபாட்டில் ஈடுபட்டனர்.


தமிழ்ப்புத்தாண்டு:


தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடுகிறோம். சூரிய பகவான் தனது பயணத்தை மேஷ ராசியில் இருந்து மீண்டும் துவங்குவதையே, தமிழ்ப்புத்தாண்டாக கருதி வருகிறோம். இந்த நாள் தென்னிந்தியாவில் தமிழ் வருடப்பிறப்பு, சித்திரை பிறப்பு, சித்திரை விஷூ, சித்திரைக் கனி ம்ற்றும் சங்கராந்தி என பல பெயர்களால் கொண்டாடப்படுகிறது.


கோயில்களில் குவிந்த பக்தர்கள்:


சுபகிருது ஆண்டு நிறைவடைந்து சோபகிருது ஆண்டு பிறந்த இந்த தமிழ்ப் புத்தாண்டானது, மகலாட்சுமி வழிபாட்டிற்கு உரிய மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பிறந்துள்ளது. அதோடு இந்த ஆண்டு சித்திரை முதல் நாளில் திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது. பெருமாளுக்குரிய முக்கிய விரத நாளான இந்த நாளில் பெருமாளையும், மகாலட்சுமியையும் வழிபட வீட்டில் செல்வ வளம் பெருகும் என நம்பப்படுகிறது. இத்தகைய பல்வேறு அம்சங்கள் பொருந்திய தமிழ்ப்புத்தாண்டையொட்டி  ஏராளமான பக்தர்கள்,  அதிகாலையிலேயே குளித்து முடித்து புத்தாடை அணிந்து கோயில்களில் குவிந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் நடைபெறுவதையோட்டி, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வடபழனி முருகன் கோயில் போன்ற பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


வீடுகளில் வழிபாடு:


தமிழ் பாரம்பரிய முறைப்படி புத்தாண்டு தினமான இன்று மா, பலா மற்றும் வாழை ஆகிய முக்கனிகள் உடன் வீட்டில் உள்ள நகைகளை வைத்து, தீப ஆராதானை காட்டி பொதுமக்கள் இறை வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.


தமிழர் பாரம்பரியம்:


சித்திரை மாத பிறப்பு என்பது மங்கலங்களின் பிறப்பாக தமிழர்கள் இடையே கருதப்படுகிறது. அதனால் தான் இந்த நாளில் பஞ்சாங்கம் படிக்கும் வழக்கம் உள்ளது.  ஆண்டு முழுவதும் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து அறிந்து, அதற்கு ஏற்றபடி தங்களின் வாழ்க்கை முறையை அமைத்து கொள்வதும், பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதும் தமிழர்களிடம் பழங்காலமாக வழக்கத்தில் இருந்து வரும் வழக்கமாக உள்ளது.


குவியும் வாழ்த்துகள்:


தமிழ்ப்புத்தாண்டையொட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதோடு சமூக வலைதளங்களில் பொதுமக்களும் நண்பர்கள் உள்ளிட்டோருக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.


பூக்களின் விலை உயர்வு:


இதனிடையே, தமிழ் புத்தாண்டையொட்டி சந்தைக்கு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளதும், விலை கூடியுள்ளதும் பூ வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.