திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. திமுக ஆட்சி அமைந்து ஏற்கனவே இரண்டு முறை அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் 3 வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் மீது புகார்கள் வந்த நிலையில் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் புதிதாக டி.ஆர்.பி ராஜாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவிற்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.


அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடமிருந்த நிதி துறை, தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


அதே சமயத்தில், பால் வளத்துறை மனோ தங்கராஜிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் சாமிநாதனுக்கு கூடுதலாக தமிழ் வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.


அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த போது நிதி துறை அவருக்கு ஒதுக்கப்பட்டது. அவரது செயல்பாடுகள்  வெளிவட்டாரத்தில் திருப்திகரமாக இருந்தாலும், கட்சிக்குள் அவரது செயல்பாடுகள் அதிருப்தி ஏற்படுத்தியது. குறிப்பாக கூட்டுறவு துறை செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என பிடிஆர் பேட்டி அளித்தது, அமைச்சர் பெரியசாமிக்கும் பிடிஆருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. சமீபத்தில் பிடிஆர் ஆடியோ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் மற்றும் பழனிவேல் தியாகராஜன் அது தொடர்பாக விளக்கமளித்தனர். தொடர்ந்து இது போல் பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டு வந்த நிலையில் அவரது இலாகா மாற்றப்படும் என தகவல் வெளியானது.


இந்நிலையில் 3 வது முறையாக இன்று அமைச்சரவை மாற்றப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டது. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


அதில், “கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும் . மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட்டையும் ('21 - '22), பெருந்தொற்றுக்குப் பிறகு இரண்டு ஆண்டு பட்ஜெட்டுகளையும் ('22 - '23, '23 - '24) சமர்ப்பித்துள்ளேன். முந்தைய ஆட்சியின் விளைவாக உட்சபட்ச பற்றாக்குறை மற்றும் கடன் விகிதங்களைப் பெற்றிருந்த போதிலும், நாங்கள் வரலாறு காணாத வகையில் சமூக நலத் திட்டங்களிலும், மூலதனச் செலவினங்களிலும் முதலீடு செய்துள்ளோம். இதனை என் பொது வாழ்விலும், என் வாழ்க்கையிலும் மிகச் சிறப்பான பகுதியாகக் கருதுகிறேன்.


நிதி ஆதாரங்களை வலுப்படுத்துதல் மற்றும் சமூக நல செலவினங்கள் ஆகியவை சமத்துவ சமுதாயத்திற்கு அவசியமான படிகள் என்றாலும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உந்து சக்தியாக விளங்குவது முதலீடுகள், நிறுவன விரிவாக்கம் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கம் ஆகியவைகளே ஆகும்.


உலகளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப இலக்காவை மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் எனக்குத் தற்போது வழங்கியதற்கு நான் நன்றியுள்ளவனாவேன். தொழில்நுட்பமே எதிர்காலத்தை வடிவமைக்கிறது என்பதை நாம் அறிவோம்.


தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு இத்துறையில் முன்னோடியாக இருந்தபோதிலும், கெடுவாய்ப்பாக கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் நமது உண்மையான செயல் திறனை எட்டுவதில் நாம் பின்தங்கிவிட்டோம். எனவே எனக்கு முன்னாள் இத்துறையை நிருவகித்த திரு. மனோ தங்கராஜ் அவர்களின் பெருமுயற்சிகளின் தொடர்ச்சியாக இத்துறையில் கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தை விரைவுப்படுத்துவதற்கும், தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகத்தை மீண்டும் ஒரு முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.


15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முன்னோடியான உலகளாவிய திறன் மையத்தை நிறுவி நிருவகித்ததன் மூலம் நான் பெற்ற சொந்த அனுபவமும், எனது தொழில் வாழ்வில் பெற்ற IT & ITES தொழில்துறையுடனான தொடர்புகளும் இந்த அமைச்சகப் பொறுப்பில் நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பயனளிக்கும் என நம்புகிறேன்.


இன்று பொறுப்பேற்கும் மாண்புமிகு நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டு மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். அவர் தனது பதவிக்காலத்தில் ஏற்கனவே நாம் எட்டியுள்ள முன்னேற்றங்களை மேலும் விரைவுபடுத்தி புதிய சாதனைகளைப் படைப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்.


கடந்த இரண்டு ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்காகவும், தற்பொழுது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள என் தலைவர் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.