தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும் மாநில வளர்ச்சிக் கொள்கைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொள்கைக்குழுவின் துணைத்தலைவராக திராவிட பொருளாதார நிபுணரும் பேராசிரியருமான ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். பகுதிநேர உறுப்பினர்களாக பேரா.விஜயபாஸ்கர், பேரா.சுல்தான் அகமது இஸ்மாயில், தீனபந்து ஐ.ஏ.எஸ்., மல்லிகா சீனிவாசன், மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப்,முனைவர் நர்த்தகி நடராஜன், சித்த மருத்துவர் கு.சிவராமன் உள்ளிட்ட பல்துறை நிபுணர்கள் அடங்கிய 8 பேர் குழுவும் இதில் நியமிக்கப்பட்டுள்ளது.


இவர்களில் மருத்துவர் அமலோற்பவநாதன் இந்தக் கொரோனா பேரிடர் காலத்தில் மிகவும் கவனிக்கத்தக்கவராக உள்ளார். யார் இந்த மருத்துவர் அமலோற்பவநாதன்? தமிழ்நாடு காசநோய் சிகிச்சையின் முன்னோடி எனச் சொல்லப்படும் மருத்துவர் சி.டி.தெய்வநாயகத்தின் மாணவர், பயிற்சி மருத்துவராக இருந்தக் காலத்தில் அவரோடு நெருங்கி பழகியவர், கவனம் செலுத்தி படிப்பது, கற்றதை மனங்கொள்ளும் வகையில் கற்பிப்பது, நோயாளிகளை அக்கறையோடு கவனித்துக் கொள்வது, ஆகச்சிறந்த பராமரிப்பைத் தருவது என அத்தனையும் தாம் அவரிடமிருந்து கற்றது என்பார். எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் சுயநிதி கல்விக்கூடங்கள் அதிகரித்தபோது, சுயநிதி மருத்துவக்கல்லூரிகள் அமைப்பதற்கு எதிராக அரசு மருத்துவர்களை ஒருங்கிணைத்துப் போராடியவர், இருதய ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் முதல் உறுப்பினர் செயலாளராகப் பதவி வகித்தவர் என தமிழ்நாடு மருத்துவ வரலாற்றின் பல பக்கங்களில் இவரது பங்களிப்பு இன்றளவும் தொடர்ந்து வருகிறது.


டிசம்பர் 2006 ஆழிப்பேரலையின் தாக்கத்தில் மக்கள் இறந்தபோது, அவர்களிடமிருந்து உறுப்புகள் திருடப்பட்டு சந்தைகளில் விற்கப்படும் புகார், பேரலையைவிடப் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இதையடுத்து 2008-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி உத்தரவின்படி இறந்தவர் உறுப்புமாற்றுத் திட்ட அரசாணை 296 பிறப்பிக்கப்பட்டது. 2014-ஆம் ஆண்டில் இந்த திட்டம் தமிழ்நாடு உடலுறுப்பு மாற்று ஆணையமாக நிறுவப்பட்டது. இதன் முதல் உறுப்பினர் செயலரானார் மருத்துவர் அமலோற்பவநாதன் ஜோசப்.  மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்தநாள அறுவைசிகிச்சைத்துறைத் தலைவராக இருந்த மருத்துவர் அமலோற்பவநாதனை உலகம்  அறியத்தொடங்கியது இதற்குப் பிறகுதான்.

உறுப்பு மாற்று சிகிச்சை என்பதே மக்களிடம் பெரும் தயக்கத்தை ஏற்படுத்தியிருந்த காலகட்டத்தில் இவரது தீவிரச் செயல்பாட்டினால்தான் எட்டு வருடங்களில் மட்டும் 2745 பெரிய உடலுறுப்புகள் வெற்றிகரமாக ஹார்வெஸ்ட் செய்யப்பட்டு பொருத்தப்பட்டது. கண், இதயநாளம், தோல் என சிறு உறுப்புகளையும் சேர்த்துக்கொண்டால் இதுவரை இவரால் மொத்தம் 4755 பேர் பயனடைந்துள்ளனர். 2016-ஆம் ஆண்டு இவர் பணி ஓய்வு பெற்றாலும் நோயாளிகளைத் தேடித் தேடி ஓடும் கால்களுக்கு ஓய்வேது என்பதாகத் தொடர்ந்து மக்கள் மருத்துவராகச் செயல்பட்டு வருகிறார்.    




மாஸ்க் அணிய வேண்டியதன் அவசியம் தொடங்கி, கை கழுவுதல் சானிடைசர் உபயோகித்தல் வரைத் தொடர்ந்து மக்களுக்கு நினைவூட்டுவதை மருத்துவராகத் தனது பணி எனச் செவ்வனே செய்துகொண்டிருப்பவர்



நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்கிற குழப்பத்தில் ஜெயலலிதாவுக்குப் பிறகான அதிமுக அரசு திண்டாடியபோது, நீட் தேர்வு நிச்சயம் தேவையில்லை என இவருடனான அரசு மருத்துவர்கள் குழு எடுத்த நிலைப்பாடு அரசு மருத்துவர்கள் அனைவருக்கும் வழிகாட்டியானது. கொரோனா முதல் அலைக்காலத்தில் வைரஸ் எண்ணிக்கையை விட அதுகுறித்த வதந்திகளின் எண்ணிக்கை வாட்சப்பில் உலா வந்தபோது தனது ஃபேஸ்புக் பக்கத்தை அந்த வதந்தி வைரஸ்களுக்கான தடுப்பூசியாகப் பயன்படுத்தியவர்.மாஸ்க் அணிய வேண்டியதன் அவசியம் தொடங்கி, கை கழுவுதல் சானிடைசர் உபயோகித்தல் வரை தொடர்ந்து மக்களுக்கு நினைவூட்டுவதை மருத்துவராக தனது பணியே எனச் செவ்வனே செய்துகொண்டிருப்பவர். இன்றளவும் சைக்கிளும் ஜோல்னா பையும்தான் அவரது பயணத்துக்கான உற்ற நண்பன். ”இனி கடவுள்தான் காப்பாத்தனும்” என்று கைவிரிக்கும் மருத்துவர்களிடையே அறிவியலையும் மருத்துவத்தையும் நம்பு எனக் கம்பெடுக்காத குறையாக இடித்துரைப்பவர். ‘அன்புதான் ஒரு உண்மையான புரட்சியாளனை வழிநடத்தும்’  என்றார் அர்ஜெண்டினா முழுக்கத் தனது மோட்டார் பொருந்திய சைக்கிளில் பயணம் செய்த மருத்துவ மாணவன் சே குவேரா.  


அதே அன்பு உங்களை இந்த அரசுப் பொறுப்பிலும் வழிநடத்தட்டும். 

Also Read:முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்த நிபுணர்கள் கவுன்சில், யார் அந்த 10 பேர் டீம்?