பொங்கல் திருவிழா என்பது சாதி மதங்களை கடந்து நாம் தமிழர்களாக கொண்டாடக்கூடிய ஒன்று என திமுக மகளிரணித் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.   


தை முதல் நாளான இன்று பொங்கல் திருநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த,  பொங்கல், பண்டிகைகளையொட்டி திமுக எம்.பி கனிமொழி தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இது, தொடர்பாக, அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், 


"அனைவருக்கும் என்னுடைய பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள். பொங்கல் திருவிழா என்பதையே இந்த மண்ணை, உழவை, விவசாயிகளை கொண்டாடக்கூடிய ஒரு திருவிழாவாக தான் நாம் வழிவழியாக போற்றிக் கொண்டாடி கொண்டிருக்கிறோம்.






இந்த மண்ணை சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதில் ஒரு முக்கிய அங்கமாக தான் முதலமைச்சர் மீண்டும் மஞ்சள் பை என்ற அந்த திட்டத்தை அறிவித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து இந்த மண்ணை, சுற்றுப்புற சூழலை நம்முடைய எதிர்கால தலைமுறையை பாதுகாக்க கூடிய ஒரு மிகச்சிறந்த திட்டம் இந்த திட்டம்.


இந்த பொங்கல் திருவிழா என்பது சாதி மதங்களை கடந்து தமிழர்களாக  கொண்டாடக்கூடிய ஒன்று. இந்த ஆண்டு அதை பாதுகாப்பாக கொண்டாடுவோம். மீண்டும் உங்கள் அத்தனை பேருக்கும் எனது பொங்கல் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.’ என்று தெரிவித்துள்ளார். 






இதற்கிடையே, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், " இயற்கையோடு இயைந்து தமிழர்கள் நாம் கொண்டாடும் பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனிப் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு, #மீண்டும்மஞ்சப்பை பயன்படுத்துவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.