முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் ஸ்டேட்டுக்குள்  அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சயன், சதீசன் , உதயகுமார் , சம்சிர் அலி, தீபு ,சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


கோடநாடு வழக்கில் தொடர்புடைய 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். குறிப்பாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அதேபோல கோடநாடு எஸ்டேட்டில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றிய தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். கனகராஜின் நண்பரும், முக்கிய குற்றவாளியான சயன் கேரள மாநிலம் பாலக்காடு அருகே குடும்பத்துடன் செல்லும் போது கார் விபத்தில் சிக்கினார். அதில் சயனின் மனைவி மற்றும் மகள் இருவரும் உயிரிழந்தனர்.




கடந்த 2019 ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பு இருப்பதாக முக்கிய குற்றவாளியான சயன் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் கூடுதல் விசாரணை தேவையுள்ளது என நீதிமன்றத்தில் தெரிவித்த நீலகிரி காவல் துறையினர், சயானை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதையடுத்து கடந்த 17 ம் தேதி ஆஜரான சயனிடம் 3 மணி நேரம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து கோடநாடு வழக்கில் தன்னை குறி வைப்பதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்ட, இவ்வழக்கு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.




இந்நிலையில் நீலகிரி மாவட்ட குற்றபிரிவு அலுவலகத்தில், விபத்தில் உயிரிழந்த கனகராஜ் அண்ணன், தனபால் ஆஜரானார். தனபாலிடம் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத், விசாரணை அதிகாரி வேல்முருகன், குன்னூர் டி.எஸ்.பி., சுரேஷ் ஆகியோர் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனபால் காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார். சயனை தொடந்து கனகராஜின் அண்ணன் தனபாலிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு இருப்பது, வழக்கு விசாரணை தீவிரமடைந்து இருப்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.


சசிகலா, எடப்பாடி பழனிசாமி, சுதாகரன் ஆகியோரை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என இவ்வழக்கில் கைதாகியுள்ள சதீஷன், சந்தோஷ் சாமி உள்ளிட்ட 3 பேர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல கோடநாடு வழக்கில் தொடர்புடையவர்களை கண்டறிந்து சட்டத்திற்கு முன் நிறுத்தவே விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.