தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, பலரும் அவரது நினைவுகளை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
பிரதமர் மோடி:
பிரதமர் மோடி தமிழில் தெரிவித்துள்ளதாவது “ ஜெயலலிதா பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர், கருணைமிக்க தலைவராகவும், திறமைமிக்க நிர்வாகியாகவும் நன்கு அறியப்பட்டவர். பல சந்தர்ப்பங்களில் அவருடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவமாகும். அவர் எப்போதும் அன்பாகவும் மக்கள் நலன் சார்ந்த முன்முயற்சிகளுக்கு ஆதரவாகவும் இருந்தவர்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளையொட்டி, பலரும் அவரை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தினர்.
நடிகர் ரஜினி :
சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று அவரது உருவ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜெயலலிதா இல்லாவிட்டாலும் அவரது நினைவு அனைவரது மனதிலும் நிலைத்து நிற்கும். இதற்கு முன்பு மூன்று முறை வேதா இல்லத்திற்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்தித்துள்ளேன். ஜெயலலிதா நாமம் வாழ்க” எனத் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழாவை அதிமுகவினர் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஜெயலலிதாவின் புகழ் பாடி வருகின்றனர்.
ஓபிஎஸ்:
அதேபோல் சென்னை காமராஜர் சாலையில் உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், “ஜெயலலிதா இருந்தவரை கட்சியை எந்தளவுக்கு நிலைநிறுத்தினார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்கு பின்னால் நடைபெற்ற அரசியல், சூது, சூழ்ச்சி, நம்பிக்கை துரோகம் இதெல்லாம் யாரால் அரங்கேற்றப்பட்டது என்பதும் எல்லோருக்கும் தெரியும். இதனால், நடைபெற்ற 11 தேர்தல்களிலும் தோல்வியை தான் சந்தித்தது. இதற்கு எல்லாம் காரணம், ஒற்ற தலைமைதான் வேண்டும் என்று அடம்பிடித்து, அதை ஏற்றுக்கொண்டவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். தொண்டர்களுடைய விருப்பம் கட்சி இணைய வேண்டும் என்பதுதான். தொண்டர்களின் எண்ணம் ஈடேற வேண்டும் என்பதற்காகத்தான் நாங்களும் தர்ம யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
Also Read: கல்லுக்குள் ஈரம்.! ஹமாஸ் இயக்கத்தினரின் நெற்றியில் முத்தமிட்ட இஸ்ரேலிய பணயக்கைதி.! வீடியோ..
எடப்பாடி பழனிசாமி:
அந்த வகையில், ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
செங்கோட்டையன்:
கடந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட செங்கோட்டையன் இந்த முறை ஈரோடு பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதேபொல் தங்கமணியும் நாமக்கல் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.