உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


தமிழ்ப் பேச்சாளரான பாரதி பாஸ்கர், சன் தொலைக்காட்சி நடத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சி மூலமாகப் பிரபலமானவர். குறிப்பாக, பெண்கள் அதிகாரம் தொடர்பான அவரது வாதங்கள் அனைவரையும் கவரும் தன்மை உடையதாக இருக்கும். பொதுவாக,  சமூகத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு தனது வாதத்தை முன்வைப்பார்.  


இந்த நிலையில், கடந்த வாரம் பாரதி பாஸ்கருக்கு திடீரென ஏற்பட்ட  உடல்நலக் குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து, உலகெங்கிலும் வாழும் லட்சக்கணக்கான தமிழர்கள் பாரதி பாஸ்கர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனைகளை தெரிவித்து வந்தனர்.


பாரதியின் உடல்நலம் குறித்து அவரது  குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறுகையில்" நேற்று, வழக்கம்போல அலுவலக பணிகளை மேற்கொண்டார். இரவில், தாங்கிக்கொள்ள முடியாத தலைவலி ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சி.டி ஸ்கேனில், மூளையில்  ரத்தக்கசிவு மாதிரியான பாதிப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுது. அறுவை சிகிச்சை எதுவும் நடைபெறவில்லை. ரத்தக்கசிவு பாதிப்புக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, பயப்பட வேண்டிய சூழல் இல்லை. விரைவில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்ற எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்தார்.   




இந்த நிலையில், “பாரதி பாஸ்கர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். இன்னும் ஒரு வாரம் அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற வேண்டும். அதன்பிறகு அவர் வீடு திரும்புவார்” என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். டாக்டர்கள் கொடுத்த இந்த தகவலால், பாரதி பாஸ்கர் குணமாக வேண்டி பிரார்த்தனைகள் செய்தோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


பாரதி பாஸ்கர், சென்னை அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரியில் வேதிப்பொறிஞர் பட்டமும், அண்ணா பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை முதுகலைப் பட்டமும் பெற்றவர். சிட்டி வங்கியில் முக்கிய பதவியில் பணி  செய்து கொண்டு வருகிறார்.  கல்கியில்  சிறுகதைகள், தினமணியில் கட்டுரைகள், அவள் விகடனில்  'நீ நதி போல ஓடிக்கொண்டிரு' என்ற தொடர்கட்டுரையும் எழுதியுள்ளார்.


 


 






நடிகை குஷ்பு சுந்தர் தனது டுவிட்டர் பக்கத்தில், " சிறந்த தமிழ் பேச்சாளார் என்பதைத் தாண்டி சிறந்த அறிவுக்கூர்மைக்கும், நகைச்சுவை உணர்வுக்கும் பெயர் பெற்றவர் பாரதிபாஸ்கர். திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். பாரதி பாஸ்கரனின் நகைச்சுவையான பேச்சு உலகெங்கிலும் வாழும் ஒவ்வொரு தமிழர்களின் இதயங்களிலும் வாழ்ந்து வருகிறது. தற்போது, மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள அவர், விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன். உலகிற்கு அவரைப் போன்ற அழகான ஆன்மா தேவை" எனப் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Swag Paati | வாரே வா தோழி வயசான தோழி.. இங்கிலீஷில் அசத்தும் சாலையோர ஸ்வாக் பாட்டி..! (வைரலான வீடியோ)