அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வருகையின்போது ஒற்றைத்தலைமை என அதிமுகவினர் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்திற்கு முன்பு, ஓபிஎஸ் வருகையின்போது தலைமையகத்தின் வெளியே ஒற்றைத்தலைமை கேட்டு அதிமுகவினர் முழக்கமிட்டனர். அத்துடன், ஓபிஎஸ் வாழ்க என்றும் கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்கு பிறகு நடைபெறும் முதலாவது மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல், சசிகலா விவகாரம், கட்சியின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா விவகாரம் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வெளியிடும் ஆடியோவால், தொண்டர்கள் அவரிடம் சென்றுவிடக் கூடாது என்பதில், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் இருவரும் கவனத்துடன் உள்ளனர். மேலும், சட்டப்பேரவை தேர்தலில் அடைந்த தோல்வியில் மீண்டு வர, உள்ளாட்சி தேர்தலில் வென்றால்தான், தொண்டர்கள் உற்சாகத்துடன் இருப்பார்கள். இதனால், உள்ளாட்சி தேர்தலில் வென்று, அதிமுக பலத்துடனையே இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. பரபரப்பான சூழ்நிலைகளுக்கு இடையே அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதால் இந்த கூட்டம் அரசியல் தளத்தில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.




சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா விடுதலை ஆன பின் தி.நகரில் உள்ள இல்லத்தில் இருந்து அறிக்கைகளையும் முக்கிய நபர்களின் சந்திப்புகளையும் நடத்தி வந்தார். இந்த நிலையில் நடந்த முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக தான் அரசியலில் இருந்து விலகி கொள்வதாக அறிக்கை மூலம் அறிவித்த நிலையில் தேர்தலில் அதிமுக தோல்விக்கு பிறகு அதிமுக தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசி அதனை ஆடியோவாக வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஓபிஎஸும் ஈபிஎஸும் கட்சிக்குள் சண்டை போட்டுக்கொள்வது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும், நாங்கள் எல்லாம் வளர்த்தக் கட்சி கண்முன்னே சிதைவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் சசிகலா பேசி இருந்தார்.


இதுவரை ஐம்பதிற்கு மேற்பட்ட தொண்டர்களிடம் பேசி சசிகலா ஆடியோ வெளியிட்டிருந்த நிலையில், கடந்த ஜூன் 14ஆம் தேதி நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்து முடிந்த பின்பு சசிகலாவுடன் தொலைபேசி வாயிலாக பேசியவர்கள் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சசிகலா ஆடியோ ஒருபுறம், கட்சி நிர்வாகிகள் நீக்கம் மறுபுறம் என சூடுபிடிக்கும் அரசியல் களத்தில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கவிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.