தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பதற்கு அரசின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை, படுக்கைகள் பற்றாக்குறை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது.


வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையால் கொரோனா நோயாளிகள் 4 பேர் உயிரிழந்ததை அடுத்து, தமிழகத்தின் சில இடங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை, ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட புகார்கள் தொடர்ந்து வருகிறது. இதைத்தடுப்பதற்கு மாநில அரசும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,


“ எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்களின் உயிர்காக்கும் பொறுப்பை முதன்மை கடமையாக கொண்டு செயல்படுகிறது. அதற்கு நேர் எதிராக செயல்படுபவர்களின் போக்கை கடுமையான நடவடிக்கைகளால் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.


உலகளாவிய அளவில் கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடி வளையத்தில் இருந்து தமிழகமும் தப்பிக்கவில்லை. நாள்தோறும் அதிகரித்து வரும் நோய் தொற்று எண்ணிக்கையையும், இறப்புகளையும் முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.




மக்களுக்காக இந்த அரசு இரவு, பகல் பாராமல் செயல்பட்டு வருகிறது. இந்த பணியில் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அனைவரும், ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கி வருகிறார்கள்.


எளிய மக்கள்கூட தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பைத் தாண்டி, அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, ஊரடங்கு எனும் கசப்பு மருந்தை விழுங்கி, மககளின் உயிரை காப்பதற்கு ஒத்துழைப்பு தருகிறார்கள். அதேநேரத்தில், சில சமூகவிரோதிகள் ரெம்டெசிவிர் மருந்துகளை பதுக்கி, கள்ளச்சந்தையில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.


அதுபோலவே, ஆக்சிஜன் சிலிண்டர்களை மிக அதிக விலைக்கு ஆங்காங்கே சிலர் விற்பது தொடர்பான குற்றச்சாட்டுகளும் வருகின்றன. பேரிடர் காலத்தில் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுவது மிக கடுமையான குற்றம்.




தடுப்பூசி இறக்குமதி, ரெம்டெசிவிர் மருந்து விநியோகம், ஆக்சிஜன் உற்பத்தி, படுக்கைகள் எண்ணிக்கை அதிகரித்தல், கட்டுப்பாடு மையங்கள் வாயிலாக உடனுக்குடன் சிகிச்சைக்கான ஏற்பாடு என தமிழக அரசு தொய்வின்றி செயல்பட்டு வருகிறது,


தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் உயிரின் மீதும் அக்கறை கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வரும் நிலையில், அதற்கு மாறாக ரெம்டெசிவிர் மருந்துகளை பதுக்குவோர் மீதும், ஆக்சிஜன் சிலிண்டர்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்” இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.