செங்கல்பட்டு படுக்கைகள் இல்லாமல் தவிக்கும் நோயாளிகள். 5 மணி நேரத்திற்கும் மேலாக ஆம்புலன்சில் காத்துக் 

கிடக்கும் அவலநிலை 

 

 

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை முதல் அலையை விட மிக வேகமாகவும் அதிக தீவிரத்துடன் இந்தியா முழுவதும் பரவி வருகிறது. முதல் அலையை காட்டிலும் இரண்டாம் அலையில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிக அளவு அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றின் பரவும் வேகமும் தீவிரமாக இருக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் வைரஸ் தொற்றின் வேகம் இதுவரை குறையாமல் கோர முகத்துடன் மக்களை அச்சுறுத்தி வருகிறது.

 


 

குறிப்பாக கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. நோயாளிகள் படுக்கை இல்லாமல் தவிர்த்து வருவதும், ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழப்பது என நாம் நினைத்துப் பார்க்காத வகையில் பல அதிர்ச்சியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன.

இதில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிக நபர்கள் பாதிக்கப்பட்ட மாவட்டமாக செங்கல்பட்டு இருந்து வருகிறது. நாளொன்றுக்கு 2,500 நபர்கள் வரை வைரஸ் தொற்றால் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மட்டும் 2,419 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 20,ஆயிரத்து 40-ஆக உயர்ந்துள்ளது. 

 




 

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கொண்ட படுக்கைகள் நிரம்பியதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் படுக்கை இல்லாமல் அவசர ஊர்தி வகனத்திலும் மரத்தடியிலும், மருத்துவமனை வாசலிலும் வெகுநேரம் காத்திருக்கின்றனர். 

 

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மொத்தம் 480 படுக்கைகள் உள்ளது. இதில் 325 படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதி உள்ளது. மீதமுள்ள 155 படுக்கைகள் சாதாரண நிலையில் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10மணிக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி உள்ள 325 படுக்கைகளும் நிரம்பி உள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள நோயாளிகள் வெளியே காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 


மூச்சுத்திணறல் காரணமாக நோயாளிகள் மயக்கமடைந்து மருத்துவமனையின் வாயிலிலும், மரத்தடிகளிலும் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று நேற்று பிற்பகலில் இருந்து சிகிச்சைக்காக அவசர ஊர்தியில் வந்தவர்களுக்கு மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாமல் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இதன் காரணமாக அவசர ஊர்தி வாகனத்திலேயே சிகிச்சைக்காக வந்தவர்கள் சுமார் 5 மணிநேரத்துக்கும் மேலாக காத்துகிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவமனை நிர்வாகத்தினர் மாற்று ஏற்பாடுகள் செய்து வெளியில் ஆதரவற்றோர் போல கிடக்கும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையினை அளிக்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

 



கடந்த சில நாட்களுக்கு முன் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 13 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் போன்று எந்த சம்பவம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஆம்புலன்ஸில் வரும் நோயாளிகளை பார்ப்பதற்கு கூட அங்கு பணியாளர்கள் இல்லை. அவசர உதவிக்கு வருவோர், மணி கணக்கில் எப்படி காத்திருக்க முடியும்? மருத்துவத்தில் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது. ஆனால் இங்கு படுக்கை வசதியை காரணம் காட்டி மணிக்கணக்கில் நோயாளிகளை காக்க வைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தொடரும் இந்த அவலத்திற்கு அரசு  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.