CM Stalin :  ஆஸ்கர் விருது வென்ற “The Elephant Whisperers" ஆவண குறும்படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸூக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடி ஊக்கத்தொகையும், சான்றிதழும் வழங்கி பாராட்டு தெரிவித்தார். 


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழா இந்தியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வாகவே அமைந்துள்ளது என்றே கூறலாம். ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் சாங் பாடலுக்கான ஆஸ்கர் விருதையும், யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதிகளும், அவர்கள் பராமரிக்கும் யானைகள் பற்றிய ஆவணப்படமான தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படம் சிறந்த ஆவணபடத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றும் அசத்தியுள்ளது.


முதலமைச்சருடன் சந்திப்பு


இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவண குறும்படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமை செயலகத்தில் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது ஆஸ்கர் விருதை முதலமைச்சர் ஸ்டாலினிடம் காண்பித்து மகிழ்ச்சி அடைந்தார். அப்போது இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்க்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் கௌரவித்தார்.


யார் இந்த கார்த்திகி கோன்சால்வ்ஸ்?


நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திகி. மும்பையில் பணியாற்றி வருகிறார். ஐ.டி. துறையில் வல்லுநரான இவரின் தந்தை, பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார்.  யானைகள் உள்ளிட்ட விலங்குகள் மேல் உள்ள காதலால், சிறு வயது முதலே தெப்பக்காடு யானைகள் சரணாலயத்துக்கு அடிக்கடி சென்று வருவதைக் கார்த்திகி வழக்கமாகக் கொண்டிருந்தார்.


இப்படி இருக்கும் நிலையில், புகைப்படப் பத்திரிகையாளரான கார்த்திகி, அடிப்படையில் காட்டுயிர் ஆர்வலர். பயணிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட கார்த்திகி, இந்தியாவின் பழங்குடி சமூகங்களுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு குறித்துத் தொடர்ந்து ஆவணப்படுத்தி வருகிறார். அதேபோல  இந்திய கலாச்சாரத்துக்கும் சமூகங்களுக்கும் இடையிலான உறவு குறித்தும் கார்த்திகிக்கு ஆர்வம் உண்டு.  இவருக்கு யானைகள் உள்ளிட்ட விலகுகள் மேல் உள்ள இந்த அன்பு தான்,  தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப் குறுபடத்துக்கும் அடித்தளமாக அமைந்தது.


தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்:


கடந்த மார்ச் 12 ஆம் தேதி அமெரிக்காவின்லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது. திரையுலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விழாவில் சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருது இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட “The Elephant Whisperers”-க்கு கிடைத்தது. இதற்கான விருதை  இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் பெற்றுக் கொண்டார். இதேபோல் இந்தியாவில்  இருந்து அனுப்பப்பட்ட ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற “நாட்டு நாட்டு” பாடல் சிறந்த பாடல் பிரிவில் விருது வென்றது. 

ஆஸ்கர் விருது இந்திய படங்களுக்கு கிடைத்ததை இந்தியாவே கொண்டாடியது. அந்த வகையில் “The Elephant Whisperers" ஆவண குறும்படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸூக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடி ஊக்கத்தொகையும், சான்றிதழும் வழங்கி பாராட்டு தெரிவித்தார். 


முன்னதாக, சிறந்த ஆவண குறும்படத்தில் தங்களை பிரதிபலித்துக் கொண்ட முதுமலை தம்பதிகளான பொம்மன் மற்றும் பெள்ளி இருவரும் கடந்த 15ஆம் சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்து பெற்றனர். இவர்களை நேரில் வாழ்த்திய முதலமைச்சர் இவருக்கும் கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கியதுடன் பொன்னாடை போர்த்தி இருவரையும் சிறப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


TN Agri Budget: ரேஷன் கடைகளில் இனிமேல் கேழ்வரகு, கம்பு - வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு