நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பிறகு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் இன்று ஆஜரானார். 


இந்நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் மெட்ரோ ரயில் நிகழ்வில் கலந்து கொண்டபோது அவரைப் பார்த்ததாகவும், அதற்கு பின்னர் அவரை பார்க்கவில்லை எனவும் ஓபிஎஸ்ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார்.


மேலும், 2016 செப்டம்பர் 22ஆம் தேதி, ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரம் தனக்கு தெரியாது எனவும், ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது என்பதை தவிர அவருக்கு இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து எதுவும் தெரியாது எனவும் ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது? எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்ற விவரமும் தனக்கு தெரியாது என ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்திருக்கிறார். 


தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவருடைய மரணத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக சில கேள்வி எழுப்பியதை தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடந்த 12ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. பல முறை ஆணையம் ஓபிஎஸ்க்கு சம்மன் அனுப்பியும் அவர் ஒரு முறை கூட நேரில் ஆஜராகமல் இருந்தார். இதுவரை 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத அவர், 9வது முறையாக அனுப்பப்பட்ட பிறகு இன்று நேரில் ஆஜராகி இருக்கிறார்.






மேலும், ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜரான சசிகலா அண்ணன் மனைவி இளவரசி விசாரணையின்போது தெரிவித்த தகவல்கள் வெளியாகியுள்ளனர். அதில், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையின் போது ஓரிரு முறை மட்டுமே பார்த்ததாகவும், அதுவும் கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்ததாகவும் கூறினார்.


மேலும், சசிகலா மூலமாக கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடன் அறிமுகம் ஏற்பட்டதாக கூறிய இளவரசி, போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா உடன் தங்கி இருந்தாலும், தன்னிடம் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து எதுவும் பகிர்ந்தது இல்லை. ஆனால் வீடு, குடும்பம் தொடர்பாக மட்டும் பேசுவார் என்றும் கூறினார். கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடன் சிறைக்கு சென்றேன். அப்போது அவர் உடல் நலக் குறைவாகவும் மிகுந்த மன உளைச்சலிலும் இருந்தார். 





2016 சட்டசபை தேர்தலின் போதும் ஜெயலலிதா உடல் நலக்குறைவாக இருந்ததாகவும் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது சசிகலா மட்டுமே உடன் இருந்து பார்த்துக்கொண்டதாகவும்,  தான் தினமும் சென்று பார்த்து வருவேன் என்ற அவர், 75 நாட்ளில் ஓரிரு முறை மட்டுமே ஜெயலலிதாவை பார்த்திருக்கிறேன் என்றும் அதுவும் கண்ணாடி வழியாக தான் பார்த்திருக்கிறேன் எனவும் கூறினார். இதனைத்தொடர்ந்து, விசாரணை நிறைவு பெற்று இளவரசி புறப்பட்டார்.


சசிகலா அண்ணன் மனைவி இளவரசி 75 நாட்களும் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில், ஆறுமுக சாமி ஆணையத்தில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.







மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண