புதுப்பேட்டை, அசுரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த  நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழந்தார். 


நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதிப்பு திரைப்பிரலங்கள் பலர் பாதிக்கப்படுவதும், அதில் சிலர் உயிரிழந்து வருவதும் அதிகரித்து வருகிறது. 




இந்நிலையில்,  நடித்த  நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் உயிரிழந்தார். புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, காலா, அசுரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நிதிஷ் வீரா. சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நிதிஷ் வீராவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




கடந்த சில தினங்களில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், நடிகர் விவேக், இயக்குநர் தாமிரா, இயக்குநர் கே.வி.ஆனந்த், மூத்த நடிகர் செல்லதுரை, நடிகர் டி.கே.எஸ் நடராஜன், நடிகர் பாண்டு, பாடகர் கோமகன், ஜோக்கர் துளசி, நெல்லை சிவா, நடிகர் மாறன், நடிகர் பவுன்ராஜ், நடிகர் ஐய்யப்பன் கோபி, சீரியல் நடிகர் குட்டி ரமேஷ் ஆகியோரை திரையுலகம் இழந்துள்ள நிலையில், நடிகர் நிதிஷ் வீராவின் மரணம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், சிலர் மாரடைப்பு உள்ளிட்ட சில காரணங்களால் உயிரிழந்திருந்தாலும், பலர் கொரோனா தொற்றுக்கு பலியாகினர்.


நடிகரும், திரைப்பட இயக்குநருமான அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்து கொரோனா தொற்றால் நேற்றிரவு உயிரிழந்தார்.


கொரோனா தொற்று நோயை எதிர்த்து நாடு தொடர்ந்து போராடி வரும் நிலையில் , பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வை , அதிகாரிகள் விழிப்புணர்வு மற்றும் பல வழிகாட்டுதலை மக்களுக்கு வழங்கி வருகின்றனர் . பல நிறுவனங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த தங்கள் முயற்சியைச் செய்து வருகின்றனர் , மேலும் பல பிரபலங்களும் தொடர்ந்து தங்களின் சமூக ஊடக பக்கங்களில் விழிப்புணர்வு வீடியோக்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.


கோலிவுட்டைச் சேர்ந்த சில பிரபலங்களும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை பரப்புவதற்காக ரோட்டரி கிளப்புடன் கைகோர்த்து சமீபத்தில் ஒரு நிமிடத்திற்கும் குறைவான வீடியோ ஒன்றை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.