கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைபெரியாறு அணை. இந்த அணையை தமிழக பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது. 126 ஆண்டுகள் பழமையான இந்த அணையின் அதிகபட்ச நீர்மட்டம் விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள மாநிலத்திற்கு இடையே பிரச்னை இருந்து வருகிறது. அணையின் கட்டமைப்பு உறுதி தன்மை தொடர்பாக இருமாநிலங்களுக்கு பிரச்னை இருந்து வருகிறது. 


முல்லை பெரியாற்றில் புதிய அணையா?


இந்த நிலையில், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டப்பட வேண்டும் என்று கேரள ஆளுநர் முகமது ஆரிப்கான் நேற்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். கேரள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் தொடக்க நாளான நேற்று அம்மாநில ஆளுநர் முகமது ஆரிப்கான் படித்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கும் உரையில், ’‘முல்லைப் பெரியாற்று அணையின் கீழ் பகுதியில் வாழும் லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நவீனகால வடிவமைப்பு மற்றும் கட்டுமானத் தரங்களுக்கு ஏற்ற வகையில் புதிய அணை கட்டுவது தான் ஒரே தீர்வு’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 


கேரள சட்டப்பேரவையில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் உரையின் போதும், முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுவது வழக்கமான ஒன்று.  ஒருபுறம் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் கேரள அரசு, இன்னொருபுறம் பல்வேறு தரப்பினரின் பெயர்களில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரச் செய்து வருவதாக தெரிகிறது.


முல்லைப்பெரியாற்று அணையின் நீர்த்தேக்க உயரத்தை 152 அடியாக உயர்த்துவதை தாமதப்படுத்த வேண்டும் என்பது தான் இதன் நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 


உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?


முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான எந்த தேவையும் இப்போது எழவில்லை. ‘‘முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலிமையாக உள்ளது. அங்கு புதிய அணை கட்டினால் எவ்வளவு வலிமையாக இருக்குமோ, அதைவிடக் கூடுதல் வலிமையுடன் இப்போதைய அணை உள்ளது. எனவே, புதிய அணை தேவையில்லை. மாறாக அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்று 2014-ஆம் ஆண்டு அளித்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்துவதற்கான பணிகளை கண்காணிப்பதற்காக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு, 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு குறைந்தது 5 முறையாவது அணையை ஆய்வு செய்து, அணை வலிமையாக இருப்பதாக சான்று அளித்துள்ளது.


கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் ஆய்வு செய்த கண்காணிப்புக் குழு கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையிலும் இதை உறுதி செய்துள்ளது.   அதன்பின் 10 மாதங்கள் கூட ஆகாத நிலையில், முல்லைப்பெரியாற்று அணை வலுவிழந்து விட்டதாகவும், அதற்கு மாற்றாக புதிய அணை கட்டப்பட வேண்டும் என்றும் கேரள அரசு சட்டப்பேரவையில் நேற்று கூறியுள்ளது. 


முல்லைப்பெரியாறு வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் ஓன்றில், தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழகமும், கேரளமும் பேச்சு நடத்தி கருத்தொற்றுமை ஏற்படுத்தினால் புதிய அணையை கட்டிக் கொள்ளலாம் என்று கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.