நடிகர் விவேக் இசைக்கு அடிமை. இசையமைப்பதில், இசை நுணுக்கங்களை தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டவர். பள்ளி நாட்களிலேயே எனது இசை ஆர்வத்தைக் கண்டுகொண்டு என்னை ஊக்குவித்தவர் நடிகர் விவேக் எனத் தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் டி.இமான். மாரடைப்பு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் இன்று காலை 4.35 மணிக்கு உயிரிழந்தார். அவருக்கு வயது 59. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் விவேக் நேற்று முன்தினம் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.


இந்நிலையில், வீட்டில் இயல்பாக பேசிக்கொண்டிருந்த அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனையான சிம்ஸில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 4.35 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1987 -ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமான நாள் முதல், நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் விவேக். ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

திரைப்படங்கள் மூலம் சீர்திருத்த கருத்துக்களை பரப்பிவந்த விவேக் சின்ன கலைவாணர் என அழைக்கப்படுகிறார். திரைப்படத்தோடு அதை நிறுத்திக் கொள்ளாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டுவந்தார். ரசிகர்கள், கலைஞர்கள் என பலரும் தங்களின் இரங்கல்களை தெரிவித்துவரும் வேளையில், ஆராய்ச்சி மாணவர் விக்னேஷ் கிருஷ்ணன் என்பவர், “கருடன் பூ போடாதுடா புளுக்க தான்டா போடும்... எத்தனை பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாதுடா... லாரி உள்ள இருக்க அத்தன ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டியாடா இந்த எலுமிச்சை பழத்துல ஓடும்வண்டி ஓடனும்னா பூஜை போட கூடாதுடா சாவி போடனும், டீசல் போடனும். எங்க மீசையோட பவர் தெரியாம பேசாத. என்ன பெரிய பவரு அதுல இருந்து கரெண்ட்டு எடுத்து கேரளாக்கு உன்னால அனுப்ப முடியுமா ?



இது மட்டும் இல்லடா Indian National highways ல ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் உங்க குல தெய்வத்த தான்டா வச்சிருக்கு கவர்ன்மெண்ட்டு. வர்ணம் கொடில தான் டா இருக்கனும் மனுஷங்க கிட்ட இருக்க கூடாதுடா



உங்கள எல்லாம் 100 பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா. இந்த வசனமெல்லாம் பேசிய விவேக் ஒரு ஆன்மீகவாதி. ஆன்மீகவாதியாக இருந்தாலும் மூடநம்பிக்கைக்கும் போலி சாமியார்களுக்கும் எதிராக தன் படங்களில் மூலமாக பல கருத்துக்களை மக்களிடையே விதைத்தவர். பெரியாரின் மூட நம்பிக்கை கொள்கையை ஒரு ஆன்மீகவாதி பேசினால் அவர் மீது எப்போது ஒரு மரியாதை வந்துவிடும். என்றுமே அந்த மரியாதைக்குரியவர் விவேக். எல்லோருக்குமானவர் பெரியார் என்பதை உணர்த்திய பலரில் விவேக்கும் ஒருவர். ஆழ்ந்த இரங்கல்” என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.