மதுரையில் இருந்த சாலமன் பாப்பையாவிடம் விவேக் பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொள்ளுங்கள் என நாம் தொலைபேசியில் கேட்ட போதே, அவரின் குரல் உடைந்துவிட்டது. அவரை தேற்றி பேச வைத்தோம். இதோ இனி பாப்பையாவின் குரல்...




‛‛சின்ன கலைவாணர் விவேக் ஒரு சிறந்த நடிகர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில மூன்றாண்டுகள் படித்தவர். அப்படி படிக்கும்போது ஓர் வருசம் என்னிடம் படித்தார். இந்த தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் மன இருளை போக்கியதில் அவருக்கு பெரும்பங்குண்டு. குறுகிய காலத்தில் சீர்திருத்த அலைகளை மக்கள் மத்தியில் பரப்புனவரு.  பகுத்தறிவு இயக்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து...’’ என, பாப்பையா சொல்லும்போதே உடைந்த அவரது குரல் பெருமையில் திளைக்கிறது.


‛‛அவரு யாரையும் புண்படுத்திட மாட்டாருங்க,  பிறருடைய மனம் வருந்தாமல் அறிவார்ந்த கருத்துகளை சொல்றதுல அவருக்கு நிகர் யாரும் இல்லீங்க. என்.எஸ்.கே.க்கு பின்னாடி சின்னக்கலைவாணர் அப்படிங்கிற பட்டம் அவருக்கு அவ்வளவு பொருந்திபோனது.


எல்லா மனுஷங்ககிட்டயும் அன்பா பழகுவாரு. எங்க வீட்டுக்கெல்லாம் வந்திருக்கிறார். என்னுடைய ஸ்டுடண்ட்  அல்லவா, அதனால என் மீது மிகுந்த அன்பும், பிரியமும் வச்சுருந்தாரு,’’ என்று சொல்லி அமைதியாகிறார். சில நொடி இடைவெளிக்குபிறகு, ‛‛எனக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டபோது தொலைபேசியில் வந்த முதல் வாழ்த்து விவேக்கோடதுதான்.


விவேக் இருந்து எங்களுக்குக்கெல்லாம் காரியம் செய்வாருன்னு நெனச்சன். ஆனா, இந்த சின்ன வயதுலயே அவர் காலமானதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை,’’ என சொல்லும் போதே உடைந்து அழுதுவிட்டார் பாப்பையா.


‛‛விவேக் மனசுல ஏதோ சோகம் இருந்துருக்குங்க. தனது மகனின் இழப்பை அவரால தாங்கிக்கவே முடியல . அந்த தக்கத்தை தாங்கமுடியாமதான் அவன தேடி அங்கேயோ போய்ட்டாரோ என்னவோ. அவரு இழப்பு திரைத்துறைக்கு மட்டுமில்லைங்க, பகுத்தறிவு இயக்கத்திற்கு நல்ல நண்பர்களுக்கு, பழக்கத்திற்குகான, இந்த தமிழகத்திற்கே பேரிழப்பு. இறை அவரது ஆன்மாவிற்கு அமைதி தரவேண்டும்,’’ என, துக்கம் அடைக்க முடித்துக் கொண்டார் பாப்பையா. 


உலகை சிரிக்க வைத்த கலைஞன் இன்று அனைவரையும் அழவைத்துக் கொண்டிருக்கிறார்.