குடும்பத்தகராறு காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணன் மகன்கள் நீதிமனறத்தில் ஆஜரானார்கள். 


குடும்பத்தகராறு


காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அதீஷ். 29 வயதாகும் இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி துணை அமைப்பாளராக உள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவரது அண்ணன் குமரேசனின் மகன்களான சுகாஷ் (25), சுனில் (22) இருவரும் அதீசிடம் தகராறில் ஈடுபட்டனர்.


ஓட ஓட விரட்டி கொலை


ஒரு கட்டத்தில் தகராறு முற்றி, அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அதீசை வெட்ட முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க அதீஷ் அங்கிருந்த மேம்பாலத்தின் மீது தப்பி ஓடினார். அவர்கள் விரட்டிச் சென்று நடுரோட்டில் அதீசை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். அவர்களை தடுக்க வந்த அதீசின் அண்ணன்களான முரளி (33), சுகுமார் (38) ஆகியோரையும் அவர்கள் வெட்டியுள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு, சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி சகாயபாரத் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


4 பேர் நீதிமன்றத்தில் சரண்


சுகாஷ், சுனில் உள்ளிட்ட 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், சுகாஷ், சுனில் இருவரும் மெக்கானிக்காக வேலை செய்து வருகின்றனர். தாத்தா தங்கமணி உடன் தகராறு ஏற்பட்டதால் நேற்று முன்தினம் சுகாசும், சுனிலும் சேர்ந்து அவரை அடித்ததாக கூறப்படுகிறது. இரவு வீட்டிற்கு வந்த அதீசிடம் இது குறித்து தங்கமணி கூறிய நிலையில் தாத்தாவை ஏன் அடித்தீர்கள் என்று அதீஸ் கேட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது.


இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் கத்தியை எடுத்து வந்து சித்தப்பாவான அதீசை ஓட, ஓட விரட்டி கொலை செய்ததும், தடுக்க வந்த இரண்டு சித்தப்பாக்களையும் வெட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சுகாஷ், சுனில் உள்ளிட்ட 4 பேர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


 


மேலும் படிக்க


CM Stalin Delhi Visit: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி விசிட்...! திடீர் பயணத்தின் பின்னணி என்ன?


 


Kodanad Case: கோடநாடு வழக்கு; எடப்பாடி ஜோதிடரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி திட்டம் - என்ன காரணம்?